சிங்கப்பூரர்களுக்குக் கிடைக்கக்கூடிய சுகாதாரப் பராமரிப்பு உலகத் தரம் வாய்ந்தவை. அவர்களின் ஆயுள் உலகிலேயே ஆக அதிகமாக இருப்பதற்கு இதுவும் காரணம்.
மருத்துவப் பராமரிப்பைப் பொறுத்தவரை, தேவைப் படக்கூடிய மக்களின் தேவையை உரிய காலத்தில் குறைவின்றி நிறைவேற்றும் அளவுக்கு வளங்களும் வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்துவதில் குறிப்பாக பொது மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மக்களில் சிலர் தேவையில்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவைப் பயன்படுத்தும் போக்கு உண்டு என்றாலும்கூட அதனால் அவசர சிகிச்சை தேவைப் படுவோருக்கு எந்தவித தாமதமும் பாதிப்பும் ஏற்பாடாத வகையில் சுகாதாரப் பராமரிப்பு ஏற்பாடுகள் திறம்பட இடம்பெற்று வந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கொரோனா கிருமி எல்லாவற்றையும் புரட்டிப் போட்டுவிட்டது.
கொவிட்-19 நோயாளிகளைக் குணப்படுத்து வதற்காகவே மருத்துவமனைகள் தங்களுடைய வளங்களில் ஏராளமானவற்றைத் திருப்பிவிடவேண்டிய சூழல் எற்பட்டது. வழக்கமாக செயல்படும் முறையையே மாற்றி அமைக்க வேண்டிய நிலை மருத்துவமனைகளுக்கு ஏற்பட்டது.
அவசர சிகிச்சை தேவைப்படுவோர் ஒரு பக்கம்; இதர சிகிச்சை பெறவேண்டியவர்கள் மறுபுறம்; கிடுகிடுவென அதிகரித்த கொவிட்-19 நோயாளிகள் வேறு ஒரு பக்கம் என்று மூச்சு திணரும் அளவுக்குச் சூழல் தலைதூக்கியது.
சுகாதாரப் பராமரிப்பு வளங்களும் அந்தத் துறையைச் சேர்ந்த ஊழியர்களும், சுமக்க இயலாத அளவுக்குச் சுமைகள் இருந்தபோதிலும் அரும்பாடுபட்டு நிலவரங்களைச் செம்மையாக சமாளித்தனர்.
இந்த முயற்சிகள் முந்திய அளவுக்கு இல்லை என்றாலும் இப்போதும் தொடர்கின்றன.
கொவிட்-19 கிருமித்தொற்று ஒடுங்கி வந்த நிலையில் அந்தக் கிருமி உருமாறி எக்ஸ்பிபி என்ற வடிவில் தலைதூக்கி பலரும் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட காரணத்தால் பொது மருத்துவமனைகள் மறுபடியும் தங்கள் வளங்களைக் கணிசமான அளவுக்கு அத்தகைய நோயாளிகளுக்காக ஒதுக்கிவைக்க வேண்டியதாயிற்று.
அவசர சிகிச்சைப் பிரிவுகளின் சுமை அதிகமாக இருந்து வரும் நிலை ஒரு பக்கம் இருந்தாலும் அத்தகைய நோயாளிகளுக்கென்றே 800 படுக்கைகள் ஒதுக்கி வைக்கப்பட்டன.
ஆனால் நிலவரம் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை. மக்களில் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருப்பதாலும் உருமாறிய கொவிட்-19 தொற்று காரணமாக கடுமையான பாதிப்புகள் ஏற்பாடாத வகையில் மக்களின் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் இருப்பதாலும் பாதிப்புகள் அவ்வளவாக இல்லை.
உச்ச நேரத்தில்கூட அந்தப் படுக்கைகளில் ஏறக்குறைய 800 தான் நிரம்பின. மற்ற நேரத்தில் 300 படுக்கைகள் காலியாகவே இருந்தன.
அத்தகைய கிருமித்தொற்று நோயாளிகளுக்காக படுக்கைகளை ஒதுக்கிவைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போயிற்று.
ஆகையால் கொவிட்-19 நோயாளிகளுக்காக கிசிச்சைப் பிரிவை முழுமையாக ஒதுக்கிவைக்கும் நடைமுறையை பொது மருத்துவமனைகள் இப்போது நிறுத்தி இருக்கின்றன.
மற்ற நோயாளிகளைக் கவனிப்பதைப் போலவே கொரோனா நோயாளிகளுக்கும் அவர்களின் பாதிப்புக்கு ஏற்ப அவை சிகிச்சை வழங்குகின்றன.
அதேவேளையில், தொற்றக்கூடிய கிருமியைப் பரப்பிவிடும் அளவுக்கு ஆபத்து உள்ளவர் என்று தெரியவந்தால் அத்தகைய நோயாளியைத் தனிமைப்படுத்தி தனி படுக்கையைப் பயன்படுத்தும் நடைமுறையையும் அவை பின்பற்றுகின்றன.
அவசர சிகிச்சை தேவைப்படும் சூழலில் ஒவ்வொரு படுக்கையும் உயிர்நாடியானதே. அப்படிப்பட்ட சூழலில் ஒரு குறிப்பிட்ட வகை நோயாளி களுக்கென்றே 800 படுக்கைகளை ஒதுக்கி வைக்க வேண்டுமென்றால் அதனால் மருத்துவமனையின் செயல்முறைகள் சங்கடத்திற்கு உள்ளாகும்.
அவசர சிகிச்சைப் பிரிவுகளில் படுக்கைகளுக்காக காத்திருக்கும் நோயாளிகளுக்கு உரிய படுக்கைகளை ஒதுக்கி சிகிச்சை அளிப்பது தாமதமாகும். உரிய சிகிச்சை தேவைப்படுவோருக்கு உரிய நேரத்தில் படுக்கைகள் கிடைக்காத சூழ்நிலை இருந்தால் நோயாளிகள் காத்திருக்கும் நேரத்தில் அதனால் எந்த அளவுக்கு விளைவுகள் ஏற்படும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
மருத்துவமனைகள் அண்மையில் இத்தகைய நிலையை சந்தித்து இருக்கின்றன. ஆகையால், 800 படுக்கைகள் விடுவிக்கப்படும் என்பது இந்தத் தருணத்தில் வரவேற்கத்தக்க ஒன்றக இருக்கிறது.
இதனால் மற்ற நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைக்க வசதி ஏற்படும். மருத்துவமனைகளும் கிடைக்கக்கூடிய படுக்கை வளங்களைச் செம்மையாகப் பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக செயல்பட வழி ஏற்படும்.
தொற்றுக்காலம் என்று இல்லாமல் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்திவர அரசாங்கம் இடைவிடாமல் முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்த முயற்சிகள் கொவிட்-19 காரணமாக தாமதம் அடைந்து இருக்கின்றன.
கட்டுமானத் துறையில் இடையூறுகள் ஏற்பட்டதால் புதிய மருத்துவ வசதிகளை உரிய நேரத்தில் தொடங்க முடியாமல் போய்விட்டது.
இருந்தாலும் இப்போது சூழ்நிலை மாறி இருக்கிறது. அடுத்த உட்லண்ட்ஸ் சுகாதார வளாகமும் டான் டோக் செங் மருத்துவமனையின் ஒருங்கிணைந்த பராமரிப்பு மையமும் ஆண்டு முடிவில் இருந்து கட்டம் கட்டமாகத் திறக்கப்படும்.
சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் மருத்துவ வளாகம் விரிவாக்கப்படும். இவற்றின் விளைவாக அடுத்த ஐந்தாண்டுகளில் பொது மருத்துவமனைகளில் கூடுதலாக 1,900 படுக்கைகள் உருவாக்கப்படும்.
இவை ஒருபுறம் இருக்க, உடல்நிலை சீராக இருக்கின்ற, மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு திரும்பவிருக்கின்ற அல்லது தாதிமை இல்லம் போன்ற நிலையங்களுக்கு மாற்றப்படவிருக்கின்ற நோயாளிகள், தற்காலிகப் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
நோயாளிகளை முன்னதாகவே மருத்துவமனைகளில் இருந்து விடுவித்து வீடுகளில் இருந்தபடி அவர்களுக்கு சிகிச்சை வழங்கும் ஏற்பாடு, தாதிமை இல்லங்கள், சமூக மருத்துவமனைகள் போன்ற இதர மாற்று ஏற்பாடுகள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவை அனைத்துமே பொருத்தமான காலத்தில் இடம்பெறக்கூடிய விவேக முயற்சிகள் என்பதால் இவை பெரிதும் வரவேற்கத்தக்கவை.

