புத்தாண்டு வருகிறது என்றாலே பொதுவாக உலகம் முழுவதற்குமே இன்பம்தான். பரபரப்பான கால ஓட்டத்தில் பலரும் ஒன்றுகூடி கவலைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு நன்னம்பிக்கையுடன் ஆடிப்பாடி மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்பது இயற்கைதான்.
மானிட இனத்தின் மனம் பொதுவாக மகிழ்ச்சியையே நாடும். அதுவும் புத்தாண்டு பிறக்கிறது என்றால், வாழ்வின் புதிய காலகட்டம் நல்லபடியாகத் தொடங்கட்டும் என்ற நம்பிக்கை ஊட்டும் புத்துணர்ச்சி பொங்கி எழும்.
உலக மக்களின் இந்த விருப்பத்தை, கண்ணுக்குத் தெரியாத கொரோனா கிருமி கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கெடுத்து ஒருவழியாக்கிவிட்டது. தொற்றுப் பிடியில் சிக்கி உலகம் பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.
எல்லாமே தலைகீழாகிவிட்டது. மக்களின் நடமாட்டத்தை முடக்கிப்போட்டுவிட்டது; பொருளியலை முறித்துப்போட்டுவிட்டது; சமூக வாழ்வின் இன்ப நாதத்தை மவுனமாக்கிவிட்டது. பழையநிலை இன்னமும் முற்றிலும் திரும்பியபாடில்லை. சிங்கப்பூரும் இதற்கு விதிவிலக்கல்ல.
பொங்கல், தீபாவளி, நோன்புப் பெருநாள், கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டு போன்ற விழாக்களில் சமயம் சார்ந்தவர்களும் சரி சாராதவர்களும் சரி எல்லாரும் ஒற்றுமையாகக் கலந்துகொண்டு மகிழ்வது இயல்பு.
ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் இவை எல்லாம் வழக்கப்படி இடம்பெறாமல், உற்சாகம் இன்றி, பலரும் சந்தித்து மகிழ இயலாதபடி மகிழ்ச்சி மங்கிய ஒரு சூழல்தான் இருந்துவந்தது.
சிங்கப்பூரர்கள் கொண்டாட்ட உணர்வுமிக்கவர்கள். மகிழ்ச்சிகரமானவர்கள். அவர்கள் வெளியே நடமாட முடியாமல், பலரையும் சந்தித்து மகிழ இயலாமல் வீட்டுக்கு வெளியே பிடித்த கடையில், பிடித்த உணவைச் சாப்பிடக்கூட இயலாமல் மிகவும் பரிதவித்துப் போய்விட்டார்கள்.
வீட்டின் உள்ளேயும் தங்கள் அன்றாட பழக்க வழக்கங்களை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. வேலை, அலுவலகம், போன்ற காலாகாலமாக இருந்துவரும் ஏற்பாட்டிலும் மாற்றம் ஏற்பட்டது.
கொரோனா பிடியில் இருந்து உலகம் இன்ன மும் அறவே விடுபடவில்லை என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இப்போது நிம்மதிப் பெருமூச்சுவிடும் அளவுக்கு நிலவரம் திரும்பி இருக்கிறது.
சிங்கப்பூர் விவேகமாக கொரோனாவைக் கையாண்ட பாணிதான் இதற்குக் காரணம். அரசாங்கமும் அதிகாரிகளும் விழிப்பு நிலையில் இருந்து செயல்பட்டதும் தடுப்பூசி சாதனையும் குறிப்பாக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் அயராத அர்ப்பணிப்பு உணர்வும், தொண்டும் உதவிகளும் மிக முக்கிய காரணிகளாக உதவின.
இதன் காரணமாக சிங்கப்பூர் தன் எல்லைகளை முன்னதாகவே திறந்துவிடவும் கொரோனா விதிமுறைகளைத் தளர்த்தவும் முடிந்தது. வருங்காலத்தை நம்பிக்கையுடன் வரவேற்று தொடர்ந்து முன்னேற தோதாக புதுத் தெம்புடன் கொவிட்- 19ல் இருந்து சிங்கப்பூர் வெளிவந்து இருக்கிறது.
நினைத்துப் பார்க்கையில் இது இலேசான சாதனை அல்ல. இமாலய சாதனையாகவேதான் இதைக் கருதவேண்டும். கொவிட்-19 நமக்கு பல பாடங்களைக் கற்பித்து இருக்கிறது. சமூக ஒன்று கூடல்கள் வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை அது நமக்கு உணர்த்தி இருக்கிறது.
ஒவ்வொருவரும் தன் நலனுக்குத் தாங்களே பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் மீது அக்கறை காட்ட வேண்டும் என்பதும் மிக முக்கியமான பாடமாக நம் மனதில் பதிந்துள்ளது.
கடுமையான கட்டுப்பாடுகள் இப்போது நடப்பில் இல்லை.
ஆனாலும்கூட, கிருமியின் பிடியில் இருந்து மீண்டுவரும் மக்களில் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பாதுகாப்பாக தொடர்ந்து நடந்துகொள்ளவேண்டும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.
இந்தச் சூழலில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊக்கம் பொங்கி எழ நேற்று ஆயிரமாயிரம் சிங்கப்பூரர்கள் மரினா பேயில் ஒன்றுகூடி புத்தாண்டை வரவேற்றார்கள்.
கொரோனாக் கிருமி தலை காட்டியதற்கு முந்திய அளவுடன் ஒப்பிடத்தக்க வகையில், சுமார் 500,000 பேர் கூடுவார்கள் என்றுதான் எதிர்பார்ப்பதாக நகர மறுசீரமைப்புக் கழகம் முன்னதாக தெரிவித்து இருந்தது.
சிங்கப்பூர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு வழக்கமான வாழ்வுக்குத் திரும்புவதைப் பறைசாற்றுவதாக அது இருந்தது.
சிங்கப்பூரர்கள் கொண்டாட்ட உணர்வுமிக்க வர்கள். இரண்டு ஆண்டுகாலம் கைகளைக் கட்டிப்போட்ட நிலையில் இருந்துவந்த மக்கள் கட்டுப்பாடுகள் அகன்று கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளக்கூடிய நிலையில் எந்த அளவுக்கு ஊக்கத்துடன், உற்சாகத்துடன் இருப்பார்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
அதேவேளையில், கொண்டாட்டங்கள் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது முந்திய காலத்துடன் ஒப்பிடுகையில் இப்போது கூடுதல் பொறுப்புகளுடன் தாங்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்று நம்பலாம்.
கொரோனா கிருமியைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரர்கள் பட்ட பாடு மறந்துவிடக்கூடிய ஒன்றல்ல. அவற்றை மறந்துவிடுவது விவேகமான ஒன்றாக இருக்காது.
கொரோனா ஒடுங்கி வரும் சூழலில், வரும் ஆண்டுகளில் மகிழ்ச்சி, மனநிறைவு பெருகும் சூழலில் பல பண்டிகைகளிலும் கொண்டாட்டங்களிலும் சமூக நிகழ்ச்சிகளிலும் வெளிப்புற இடங்களிலும் ஒன்றுகூடி சிங்கப்பூரர்கள் மகிழ்ச்சியில் திளைக்கவிருக்கிறார்கள்.
அந்த மகிழ்ச்சியை வீணடித்துவிடும் வகையில் தாங்கள் என்றுமே செயல்படக் கூடாது என்பதை உணர்ந்துள்ள மக்கள், தங்களுடைய நலனுக்கும் வீட்டு, நாட்டு நலனுக்கும் உறுதுணையாக இருப்பார்கள் என்பது திண்ணம்.

