ஆஸ்திரேலியாவிலிருந்து கால்நடை இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தும் இந்தோனீசியா

ஆஸ்திரேலியாவிலிருந்து கால்நடை இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்தும் இந்தோனீசியா

1 mins read
fcf8c77a-0f2f-4452-8f4b-0c460a79a12a
இந்தோனீசியாவில் அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட கால்நடைகளில் சிலவற்றுக்கு தடித்த தோல் நோய் இருந்ததாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளளனர். - படம்: சிஜி/இசி/ஜேடபிள்யூ

சிட்னி: இந்தோனீசியா, ஆஸ்திரேலியாவிலிருந்து உயிருள்ள கால்நடைகளை இறக்குமதி செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட சில கால்நடைகளுக்கு தடித்த தோல் நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஆஸ்திரேலியாவின் நான்கு இடங்களிலிருந்து கால்நடைகள் இறக்குமதி செய்வதை இந்தோனீசியா நிறுத்தியிருக்கிறது.

இந்த விவரங்களை வெளியிட்ட ஆஸ்திரேலிய அரசாங்கம், இந்தோனீசியாவின் தேவையைப் பூர்த்தி செய்ய அந்நாட்டுடன் இணைந்து செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது.

தடித்த நோய் இல்லாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய வேளாண் அமைச்சர் முர்தே வாட் உறுதியளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பாதிக்கப்பட்ட வசதிகளிலிருந்து கால்நடை ஏற்றுமதி தங்குத் தடையின்றி தொடருவதற்காக துரித கதியில் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தடித்த தோல் நோய், கொப்புளங்களை ஏற்படுத்தி பால் உற்பத்தியைக் குறைக்கிறது. கால்நடைகளிடையே அதிவேகத்தில் பரவக்கூடியது. ஆனால் இது மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதில்லை.

ஆஸ்திரேலியா மற்ற இடங்களிலிருந்து தடித்த தோல் நோய் இல்லாத கால்நடைகளை தொடர்ந்து இந்தோனீசியாவுக்கு ஏற்றுமதி செய்யும் என்று திரு வாட் மேலும் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவின் கால்நடை ஏற்றுமதிக்கு இந்தோனீசியா ஆகப்பெரிய சந்தையாக விளங்குகிறது.

2021ஆம் ஆண்டிலிருந்து 2022 வரை ஆஸ்திரேலியாவிலிருந்து 56 விழுக்காடு கால்நடைகள் இந்தோனீசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் மதிப்பு 900 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்.

குறிப்புச் சொற்கள்