பருவநிலை மாற்றங்கள் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் (ஐபிசிசி) அங்கமான பணிக்குழு IIன் இணைத் தலைவராக சிங்கப்பூரரான இணை பேராசிரியர் வின்ஸ்டன் சாவ், 45, தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறார்.
பருவநிலை மாற்றங்கள் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு என்பது ஐநா அமைப்பின் ஆகஉயரிய பருவநிலை அறிவியல் அமைப்பாகும். கிடைக்கக்கூடிய ஆகப்புதிய பருவநிலை அறிவியல் நுட்பங்களைக் கொண்டு கொள்கைகளை உருவாக்கும் பல நாடுகளின் தலைவர்களுக்கு அது வழிகாட்டி உதவுகிறது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் களைவதற்கான முயற்சிகள் இடம்பெற இதன் மூலம் உதவி கிடைக்கும்.
பருவநிலை மாற்றங்கள் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவுக்கு நெதர்லாந்தின் பார்ட் வான் டென் ஹர்க் மற்றொரு தலைவர். கென்யா நாட்டின் நைரோபி நகரில் ஜூலை 27ஆம் தேதி இணை பேராசிரியர் வின்ஸ்டன் சாவ் அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
பருவநிலை மாற்றங்கள் தொடர்பான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு மூன்று பணிக்குழுக்களாகவும் ஒரு சிறப்புப் பணிக் குழுவாகவும் பிரிந்து செயல்படுகிறது. அது ஆறு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை அறிக்கை வெளியிடுகிறது.
இணைப் பேராசிரியர் சாவ், நெதர்லாந்தின் பிரமுகருடன் சேர்ந்து பருவநிலைத் துறையின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்கள் குழுவுக்குத் தலைமை தாங்குவார்.
பருவநிலை மாற்றத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள், அவற்றின் விளைவுகளைத் தவிர்த்துக்கொள்ளக்கூடிய வழிமுறைகள் பற்றி ஆகப் புதிய அறிவியல் அம்சங்களை அவர்கள் தெரியப்படுத்துவார்கள்.

