கோல்கத்தா: வங்கக் கடலில் உருவான அம்பன் புயல் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலத்துக்கும் வங்க தேசத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. இந்தப் புயலின் கோரப் பிடியில் சிக்கி மேற்கு வங்கத்தில் 72 பேர் பலியாகி உள்ளனர்.
'சூப்பர் புயல்' என்று வர்ணிக்கப்பட்ட இப்புயல் கரையைக் கடக்கும் போது பலத்த சேதங்களை ஏற்படுத்தி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அவர் 2.5 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்திலும் வங்க தேசத்திலும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. பல மணிநேரம் நீடித்த இடைவிடாத பலத்த கனமழை காரணமாக பல இடங்களை வெள்ளம் சூழ்ந்தது.
மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் 72 பேர் உயிரிழந்த நிலையில், ஹவுரா, கோல்கத்தா, மேற்கு மிட்னாபூர் உள்ளிட்ட பகுதிகளை அம்பன் புயல் புரட்டிப் போட்டுள்ளது.
இப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்ப சில நாட்கள் ஆகலாம் என்றும் புயல் சேத மதிப்புகளைக் கணக்கிட நான்கு நாட்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா கிருமி தாக்கத்தை விட அம்பன் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் அதிகம் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
அம்பன் புயல் ஒடிசாவிலும் தன் கோர சுவடுகளைப் பதித்துச் சென்றுள்ளது. அங்கு சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வசிப்பிடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒடிசாவில் புரி, கட்டாக், ஜாஜ்பூர், கேந்திரபாரா, கஞ்சம், பாலாசூர், குர்தா மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியதால் எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. ஒடிசாவில் புயலுக்கு இருவர் பலியாகி உள்ளனர்.
இதே போல் மேற்கு வங்கத்தில் ஐந்து லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் புயல் கரையைக் கடக்க ஐந்து மணிநேரம் ஆனது. அப்போது 155 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக ஏராளமான மரங்களுடன் மின்கம்பங்களும் சாய்ந்தன.
அம்பன் புயல் காரணமாக அசாம், மேகாலயா மாநிலங்களிலும் பலத்த மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

