வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் ஏறத்தாழ 950,000 குடிமக்கள் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் வரையில் $135 மில்லியன் சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி கிடைக்கும்,
துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது $900 மில்லியன் குடும்ப ஆதரவுத் திட்டம் பற்றி அறிவித்தார். அதையொட்டி இந்தத் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.
பொருளியல் நிச்சயமில்லாத நிலையில் இருக்கிறது. இந்நிலையில் குடும்பங்களுக்கு கூடுதல் ஆதரவைக் கொடுப்பது இந்தத் தள்ளுபடியின் நோக்கம் என்று நிதி அமைச்சு நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க குடும்ப ஆதரவுத் திட்டம் உதவுகிறது.
குறைந்த வருவாய் முதல் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் அதிக தள்ளுபடியைப் பெறுவார்கள். பற்றுச்சீட்டும் இவற்றில் இடம்பெறும். அவற்றைக் கொண்டு குடும்பங்கள் செலவுகளை ஈடுசெய்யலாம். அதே நேரத்தில் உள்ளூர் நிறுவனங்களுக்கும் உதவலாம்.
சேவை, பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடி மற்றும் ஜிஎஸ்டி வரி பற்றுச்சீட்டுகளும் குடும்பங்களுக்குக் கொடுக்கப்படும்.
தகுதிபெறும் குடும்பங்கள் தங்கள் வீடுகளின் வகையைப் பொறுத்து இந்த நிதி ஆண்டில் ஒன்றரை மாதம் முதல் மூன்றரை மாதம் வரையிலான சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடியைப் பெறலாம்.
இதைத் தெரிவிக்கும் கடிதங்கள் குடும்பங்களுக்கு ஏப்ரல் முதல் தேதி வாக்கில் அனுப்பப்படும்.
வரும் ஏப்ரல், ஜூலை, அக்டோபர், மற்றும் 2022 ஜனவரி ஆகிய மாதங்களில் குடும்பங்களுக்குக் காலாண்டு கட்டணத் தள்ளுபடி தானாகவே கிடைக்கும்.
இதனிடையே, துணைப் பிரதமர் திரு ஹெங், கொவிட்-19 பல சிங்கப்பூரர்களைப் பாதித்துவிட்டதாக நேற்று ஃபேஸ்புக்கில் தெரிவித்தார். குடும்ப ஆதரவுத் திட்டம் பற்றி வரவுசெலவுத் திட்டத்தில் தான் அறிவித்து இருந்ததையும் அவர் சுட்டினார்.
கொவிட்-19 நெருக்கடி காலத்தில் எல்லா குடும்பங்களுக்கும் உதவுவதன் மூலம் நாம் இன்னும் வலுவாக மேம்பட முடியும் என்றும் திரு ஹெங் கூறினார்.
இந்தத் தள்ளுபடிகளுக்குத் தாங்கள் தகுதி பெறுவதைக் குடும்பங்கள் My HDBPage தளத்திற்குச் சென்று தெரிந்துகொள்ளலாம். தங்கள் நகர மன்றத்தையும் தொடர்புகொள்ளலாம்.

