நெக்ஸ் கடைத்தொகுதி கட்டடத்தில் செயல்படும் ஷா திரையரங்கில் காற்றை வெளியேற்றும் ஒரு குழாய் விழுந்ததில் இரண்டு பேர் காயம் அடைந்த சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன் நிகழ்ந்தது.
அதையடுத்து மூடப்பட்ட அந்தத் திரையரங்கம் இப்போது திறக்கப்பட்டு உள்ளது.
திரையரங்கம் மார்ச் 18ஆம் தேதி செயல்படத் தொடங்கியதாக பேச்சாளர் ஒருவர் கூறினார் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
காற்றுக் குழாய் சம்பவம் போன்று இனி வேறு விபத்து எதுவும் நிகழாத வகையில் பல பணிகளையும் இரண்டு வாரங்கள் முன்னதாகவே நிர்வாகம் செய்து முடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நெக்ஸ் கடைத்தொகுதி கட்டடத்தில் செயல்படும் ஷா திரையரங்கு குழுமத்தில் மொத்தம் 10 அரங்குகள் உள்ளன.
அவற்றில் ஹால் 6 என்ற அரங்கில் சென்ற ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி காற்றை வெளியேற்றும் குழாய் கூரையில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்த இருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
நெக்ஸ் கட்டடத்தை நிர்வகித்து வரும் கோல்ட் ரிட்ஜ் என்ற நிறுவனம், அந்தச் சம்பவத்தை அடுத்து நிபுணத்துவ பொறியாளர் ஒருவரை அமர்த்தி புலன் விசாரணை நடத்தியது.

