உயிருக்குப் போராடும் நோயாளிகளுக்கு அந்திமகால சிகிச்சைகளை வழங்க தாங்கள் ஆயத்த மாக இல்லை என்று இங்கு பெரும்பாலான சுகாதாரப் பராமரிப்பு பட்டத்தொழிலர்கள் கருதுகிறார்கள்.
ஓர் ஆய்வு இவ்வாறு தெரிவிக்கிறது. இருந்தாலும் அத்தகைய சேவைத் துறையின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
சிங்கப்பூர் ஹாஸ்பிஸ் மன்றம் என்ற அமைப்பு 2,327 சுகாதாரப் பராமரிப்புத் துறை பட்டத்தொழிலர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்றை இணையம் வழி ஆகஸ்ட் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடையில் நடத்தியது.
அந்த ஆய்வு முடிவுகள் நேற்று நடந்த இந்த மன்றத்தின் 25வது ஆண்டு விழா விருது வழங்கும் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன.
மருத்துவப் பள்ளியில் அல்லது தாதிமைப் பள்ளியில் அல்லது சமூகப் பணிகளைப் பற்றி படிக்கையில் 10 பேரில் ஏறத்தாழ நான்கு பேர் மட்டுமே அந்திமகால சிகிச்சை பற்றிய பயிற்சியைத் தாங்கள் பெற்றதாக அந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
அத்தகைய பயிற்சியைப் பெற்றவர்களில் 58 விழுக்காட்டு மருத்துவர்கள், 45 விழுக்காட்டு தாதியர்கள், 60 விழுக்காட்டு உதவி சுகாதாரப் பட்டத்தொழிலர்கள் தாங்கள் முற்றிவிட்ட நோயாளிகளுக்கு ஆதரவு தரும் சிகிச்சைகளை வழங்க போதிய அளவுக்கு ஆயத்தமாக இல்லை என்று கருதுகிறார்கள்.
இதனிடையே, இந்த மன்றத்திற்குத் தலைமை வகிக்கும் டாக்டர் பேட்ரிஷியா நியோ, சிங்கப்பூரை பொறுத்தவரை அந்திமகால சிகிச்சைத் துறை முழு வளர்ச்சி பெறாத ஒரு துறை என்று கூறினார்.
2006ஆம் ஆண்டு வரை அது ஒரு மருத்துவ துணைப் பிரிவாக தோற்றுவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

