சிங்கப்பூரில் நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாக 12 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களையும் சேர்த்து கொவிட்-19 தொற்றியோரின் மொத்த எண்ணிக்கை 60,265 ஆகியது.
அந்த 12 பேரில் சமூகத் தொற்றுக்கு ஆளான ஒருவரும் அடங்குவார் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.
மார்ச் 12ஆம் தேதிக்குப் பிறகு நேற்றுதான் முதன்முதலாக ஒருவருக்குச் சமூகத்தொற்று ஏற்பட்டுள்ளது. மற்ற 11 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.
தனிமையில் இருக்கும்படி எல்லாருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் யாருக்கும் நேற்று தொற்று இல்லை. சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றி இருந்த ஒரே ஒரு கடைசி குழுமமும் கிருமி இல்லாத நிலைக்குத் திரும்பியது.
ஆகையால் இப்போது கொவிட்-19 கிருமித்தொற்றுக் குழுமம் என்று எதுவும் இல்லை என்று அமைச்சு வியாழக்கிழமை தெரிவித்தது.
இதனிடையே, சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியைச் சேர்ந்த 438 பேருக்கும் தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் தெரியவந்ததாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
வியாழக்கிழமை புதிதாக 17 பேருக்கு கிருமி தொற்றி இருந்தது. அனைவருமே வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். தனிமையில் இருக்க வேண்டும் என்று எல்லாருக்கும் உத்தரவிடப்பட்டது.
வியாழக்கிழமை எட்டு பேர் குணமடைந்தனர். அவர்களையும் சேர்த்து மொத்தம் 60,071 பேர் முற்றிலும் குணமடைந்து இருக்கிறார்கள்.
25 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்கள். யாரும் தீவிர கண்காணிப்பில் இல்லை.
112 பேர் சமூக நல்வாழ்வு நிலையங்களில் குணமடைந்து வருகிறார்கள். கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரில் 30 பேர் மாண்டு விட்டனர்.

