சிங்கப்பூரின் மூத்த அரசாங்கச் சேவை அதிகாரியான சத்விந்தர் சிங் ஆசியான் பொருளியல் சமூகத்தின் அடுத்த துணைத் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
ஆசியான் பொருளியல் சமூக அமைப்பு, ஆசியான் செயலகத்தின் கீழ் செயல்படுகிறது. திரு சத்விந்தர் சிங், அந்தப் பொறுப்பை நேற்று முதல் மூன்றாண்டு காலத்திற்கு ஏற்றுக்கொண்டு இருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு நேற்று அறிவித்தது.
திரு சத்விந்தர் சிங், என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் உதவி தலைமை நிர்வாக அதிகாரி பதவியைக் கைவிட்டுள்ளார்.
பிலிப்பீன்சை சேர்ந்த டாக்டர் அலாடின் டி. ரில்லோவுக்குப் பதிலாக புதிய பொறுப்பை மேற்கொள்ளும் திரு சிங், ஆசியான் பொருளியல் சமூகத்தின் வழிகாட்டித் திட்டம் 2025ஐ நடைமுறைப்படுத்த ஆசியான் தலைமைச் செயலாளருக்கு உதவுவார்.
அதோடு, அந்தச் சமூகத்தின் இலக்குகள் நிறைவேறவும் திரு சிங் சேவையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஆசியான் செயலகத்தில் இருக்கும் ஆசியான் பொருளியல் சமூகத் துறையின் இயக்குநரகங்களையும் இதர பல பிரிவுகளையும் திரு சிங் மேற்பார்வையிடுவார்.
ஆசியான் உறுப்பு நாடுகள், பேச்சுவார்த்தைப் பங்காளி நாடுகள், அனைத்துலக அமைப்புகள் ஆகியவற்றுடனான உறவுகள், கொள்கைகள், பொருளியல் விவகாரங்களில் ஒத்துழைப்பு மேம்பாடுகளை திரு சிங் நிர்வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

