கொவிட்-19 காரணமாக சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாகி இருக்கின்றன. இதன் காரணமாக லாபகரமான சமூக, சுற்றுச்சூழல் முதலீடுகளுக்கான தேவை கூடி இருக்கிறது என்று சிங்கப்பூரின் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனம் நம்புகிறது.
சமூகத்திலும் சுற்றுப்புறத்திலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில், லாபத்தை யும் ஈட்டித் தரக்கூடிய அத்தகைய முதலீடுகள் 2019ல் $715 பில்லியனாக உயர்ந்தன.
அவை, அதற்கு முந்தைய ஆண்டில் $502 மில்லியனாக இருந்தன.
உலகளாவிய லாபகரமான சமூக, சுற்றுச்சூழல் முதலீடுகள் கட்டமைப்பு என்ற ஓர் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் இந்த நிலவரங்கள் தெரிய வருகின்றன.
அரசாங்க முதலீடு நிறுவனங்களில் ஒன்றான தெமாசெக், ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் ஒருமித்த கவனம் செலுத்தும் 'லீஃப்பிராக் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்திற்கு $500 மில்லி யன் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
இத்தகைய முதலீடுகளை நிர்வகிக்கும் ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டு உள்ள தொகையில் தனித்த ஆகப்பெரிய தொகை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
"வளர்ச்சியைத் தூண்டிவிடும் ஊக்கியாக இருப்பதே நமது இலட்சியம்," என்று இந்த நிறுவனத்தின் இத்தகைய முதலீட்டுத் துறைத் தலைவரான பனோய்ட் வேலன்டின் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திடம் கூறினார். லீஃப்பிராக் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம், வளரும் நாடுகளில் நிதிச் சேவைகளிலும் சுகாதாரப் பராமரிப்பு துறைகளிலும் முதலீடு செய்யும் நிறுவனம் ஆகும்.
இத்தகைய முதலீடுகளுக்காக 'ஏபிசி வோர்ல்ட் ஆசியா' என்ற ஒரு தனியார் பங்குமுதல் நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன் தெமாசெக் அமைத்தது.
லீஃப்பிராக் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் பங்கு வாங்க திட்டமிடும் தெமாசெக், தனது செல்வாக்கைப் பெருக்கும் வகையில் இதர நிதி முதலீட்டு நிறுவனங்களிலும் பணம்போடுவது பற்றி பேச்சு நடத்தி வருகிறது.
அவற்றில் ஒரு நிறுவனம் இந்தியா மீது ஒருமித்த கவனம் செலுத்தும் என்று வேலன்டின் குறிப்பிட்டார்.

