கொவிட்-19 மீட்சி தற்காலிக மானியத்திற்கான (சிஆர்ஜி-டி) விண்ணப்பங்கள் ஜூன் 3ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் கழித்து ஜூலை 2 ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள குறைந்த வருாய் மற்றும் நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கு உதவுவதற்காக இந்தத் தற்காலிக மானியம் இடம்பெறுகிறது.
மே 16ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதிவரை சம்பளம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்ட தகுதி உள்ள ஊழியர்கள் அல்லது இதே காலகட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் பாதி வருவாயை இழந்து இருக்கும் ஊழியர்கள் இந்த மானியத்தைப் பெற விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்களுக்கு $700 தொகை கிடைக்கும். தற்காலிக மானியம், இப்போது நடப்பில் இருக்கும் கொவிட்-19 மீட்சி மானியத்திற்கு உறுதுணையாக இடம்பெறுகிறது.
நடப்பில் இருக்கின்ற மானியம் ஜனவரி 18ஆம் தேதி தொடங்கப்பட்டது. இது தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருவாய் மற்றும் நடுத்தர வருவாய் குடும்பத்தினருக்கும் சுயமாக வேலை பார்ப்போருக்கும் உதவுகிறது. நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் தற்காலிக மானியம் பற்றி கடந்த வெள்ளிக்கிழமை கூறினார்.
இந்த இரண்டு வகை மானியங்களுக்கும் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள் ஒரே மாதிரியானவை என்றாலும் தற்காலிக நிதி உதவியைப் பெறுவதற்கான நிபத்னைகளில் இரண்டு வேறுபாடுகள் உள்ளன. இதைப் பெறுவதற்கு மனு செய்வோர் மே 16ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிவரை குறைந்தபட்சம் ஒரு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பில் அனுப்பப்பட்ட தகுதி உள்ள ஊழியர்களாக இருக்கவேண்டும். அல்லது இதே காலகட்டத்தில் குறைந்தபட்சம் ஒரு மாதத்தில் பாதி வருவாயை இழந்துள்ள ஊழியர்களாக இருக்கவேண்டும்.
தற்காலிக மானியத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது வேலை தேடியதற்கான அல்லது பயிற்சிக்கான அத்தாட்சி எதையும் தாக்கல் செய்யவேண்டியதில்லை என்பது இரண்டாவது வேறுபாடு. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தது.
தனிப்பட்டவர்கள் ஒரே நேரத்தில் இரண்டையும் பெற முடியாது என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
கொவிட்-19 வாகன ஓட்டுநர்கள் நிவாரண நிதி போன்ற இதர கொவிட்-19 ஆதரவுத் திட்டங்களின் மூலம் இப்போது உதவி பெறுவோரும் தற்காலிக மானியத்திற்குத் தகுதி பெற மாட்டார்கள்.
தற்காலிக மானியம் பற்றி நேற்று ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, இந்தப் புதிய தற்காலிக மானியம் முடியும்போது, தொடர்ந்து உதவி தேவைப்படும் ஊழியர்கள் இப்போது நடப்பில் உள்ள மானியத்தைப் பெறலாம் என்றார்.
டிசம்பர் 31 ஆம் தேதி வரை இதற்காக விண்ணப்பிக்கலாம்.

