அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழ சிங்கப்பூர் பல முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.
இந்நிலையில், உயிரியல் மருத்துவத் துறையில் காணும் முன்னேற்றங்கள் தன் மக்களுக்குப் பலன் அளிக்கின்றன என்பதை நாடு உறுதிப்படுத்த வேண்டும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வலியுறுத்திக் கூறி இருக்கிறார்.
அதோடு, அந்த முன்னேற்றங்கள் நாட்டின் நெறிமுறை நிலைப்பாட்டை மீறாமல் அவற்றை ஒட்டியே இடம்பெறுகின்றன என்பதையும் சிங்கப்பூர் உறுதிசெய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
'உயிரியல் நெறிமுறைகள் ஆலோசனைக் குழு'வின் 20வது ஆண்டுவிழாவைக் குறிக்கும் வகையில் நேற்று நடந்த மெய்நிகர் பொது மாநாடு ஒன்றில் திரு ஹெங் பேசினார்.
அறிவியல் ஆய்வுகளில் சிங்கப்பூர் அதிகமான முதலீடுகளைச் செய்து வருகிறது என்றும் இவற்றால் ஏற்பட்ட பலனை கொவிட்-19 தொற்றின்போது காண முடிந்தது என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 காலத்திலும் உயிரியல் மருத்துவத் துறை தொடர்ந்து முதலீடுகளை ஈர்த்துவருவதாக அவர் கூறினார். 'ஃபசர்-பயோஎன்டெக்' தடுப்பூசி உருவாக்கத்திற்குப் பங்காற்றியுள்ள பயோஎன்டெக் நிறுவனம், சிங்கப்பூரில் தடுப்பூசி தயாரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதை அவர் சுட்டினார்.
மனித உடல்நலம் மற்றும் ஆற்றல் தொடர்பிலான துரித வளர்ச்சி, மேலும் புதிய நெறிமுறை எல்லைகளுக்கு வழி கோலுவதாகக் குறிப்பிட்டார்.
"உயிரியல் தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு காரணமாக விஞ்ஞானிகளால் ஒரு நாள், மனிதச் சிந்தனை, உணர்ச்சிகள், நடத்தை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
"ஆகையால் இத்தகைய அக்கறைக்குரிய விவகாரங்களை உரிய அம்சங்களில் காலக்கிரம முறைப்படி நாம் கவனம் செலுத்தி வரவேண்டும்," என்று திரு ஹெங் கூறினார்.
புத்தாக்கத்தின் எல்லைகள் விரிவடையும் சூழலில் தகவல் ரகசிய காப்புத்தன்மை, தனி உரிமை, பாதுகாப்பு ஆகியவை நிலைநாட்டி வரப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதில் சிங்கப்பூர் ஏற்கெனவே அக்கறை காட்டி வருவதை துணைப் பிரதமர் சுட்டினார்.
ஆய்வு, புத்தாக்கம் இரண்டின் தொடர்பிலும் மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை அதிகம் கையாள வேண்டியதன் முக்கியத்துவத்தை சிங்கப்பூர் அங்கீகரப்பதாகவும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
சிங்கப்பூர் கடந்த 20 ஆண்டுகளில் உயிரியல் மருத்துவத் துறை பெரும் முன்னேற்றம் கண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட திரு ஹெங், இந்த அறிவியல் துறை முன்னேறுவதற்கு உயிரியல் முன்னேற்றங்கள் தொடர்பான நெறிமுறைகள் இன்னும் முக்கியத்துவம் பெறுகின்றன என்றார்.

