இந்தியாவைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் யுவராஜ், 39, என்ற ஆடவர், கொவிட்-19 சூழலில், தன் சகாக்கள் ஏழு பேரின் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி இயந்திரத்தில் இருந்து $84 மதிப்புள்ள தெமாசெக் அறநிறுவன முகக்கவசங்களைப் பெற்றார்.
இந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த ஆடவருக்கு நேற்று ஏழு வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தவிர்க்க உதவும் வகையில் தெமாசெக் அறநிறுவனம் கட்டம் கட்டமாக முகக்கவசங்களை விநியோகித்து வந்தது. நான்காவது கட்டமாக கடந்த மார்ச் மாதம் அது கொடுத்த முகக் கவசத்தை மக்கள் மார்ச் 1 முதல் 14 வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள இயந்திரங்களில் ஒருவரின் அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை எண்ணைப் பயன்படுத்தி முகக்கவசத்தைப் பெறலாம். யுவராஜ் தன்னிடம் தன் சகாக்களின் பெயர் உள்ளிட்ட விவரப் பட்டியலை வைத்து இருந்தார்.
அவற்றில் ஏழு பேரின் விவரங்களைத் தேர்ந்து எடுத்துக் கொண்டு அந்த ஏழு பேரின் சம்மதத்தைப் பெறாமலேயே மார்ச் 1ஆம் தேதி சுவா சூ காங் சமூக மன்றத்தில் உள்ள ஓர் இயந்திரத்தில் இருந்து தலா $12 விலையுள்ள ஏழு முகக்கவசங்களை யுவராஜ் பெற்றார்.
அந்த சகாக்களில் ஒருவரான 53 வயது ஆடவர் முகக் கவசத்தைப் பெற முயன்று முடி யாமல் போனதை அடுத்து மார்ச் 4 ஆம் தேதி போலிசிடம் புகார் தெரிவித்தார்.

