சிங்கப்பூரில் உற்பத்தித் துறை மே மாதம் பெருமளவில் உயர்ந்தது. ஆண்டுக்காண்டு அடிப்படையில் அந்த அதிகரிப்பு 30 விழுக்காடாக இருந்தது. உற்பத்தித் துறை தொடர்ந்து ஏழாவது மாதமாக வளர்ச்சி கண்டு வருகிறது என்பது பொருளியல் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவருகிறது.
புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட பொருளியல் வல்லுநர்கள், மே மாதம் உற்பத்தித் துறை 24.1 விழுக்காடு வளர்ச்சி அடையும் என்று முன்னுரைத்து இருந்தார்கள்.
என்றாலும் அந்த மாதத்தில் உற்பத்தித் துறை இதற்கும் மேலாக விரிவடைந்து இருக்கிறது.
உயிரியல் மருத்துவ உற்பத்தித் துறையைச் சேர்க்காமல் பார்த்தால், உற்பத்தித் துறை வளர்ச்சி 29 விழுக்காடாக இருந்தது.
மாதச் சரியாக்க அடிப்படையில் ஒட்டுமொத்த உற்பத்தித் துறை வளர்ச்சி 7.2 விழுக்காடாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது.
எல்லா துறைகளிலும் வளர்ச்சி காணப்பட்டது. துல்லியப் பொருளியல் துறை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மாதம் 58.6 விழுக்காடு கூடியது.
சென்ற ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்தத் துறை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 22.7 விழுக்காடு வளர்ச்சி கண்டு இருக்கிறது.
மின்னணு உற்பத்தி 23.2 விழுக்காடு கூடியது. குறிப்பாக கணினிச்சில்லு தொழில்துறை 25.5% வளர்ந்தது.
மின்னணுத் தொழில்துறை இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 22.9% வளர்ச்சி கண்டு இருக்கிறது.
போக்குவரத்து பொருளியல் துறை கடந்த மே மாதம் 44 விழுக்காடு கூடியது.
உயிரியல் உற்பத்தித் துறை 35.6% அதிகரித்தது. உற்பத்தித் துறையின் பொதுவான வளர்ச்சி மே மாதம் 27.8 விழுக்காடு கூடியது. ரசாயனத் துறை உற்பத்தி ஆண்டுக்காண்டு அடிப்படையில் கடந்த மே மாதம் 16.2 விழுக்காடு அதிகரித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

