சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்களில் அல்லது ஸ்கூட் மலிவுக் கட்டண விமானங்களில் பயணம் செய்வோர், இந்தோனீசியா, இந்தியா, நேப்பாளம் ஆகிய நாடுகளில் இடம்பெறும் சுற்றுச்சூழல் செயல்திட்டங்களுக்கு உதவுவதன் மூலம் தங்கள் சுற்றுச்சூழல் பொறுப்பை நிறைவேற்ற முடியும்.
தாங்கள் பயணம் செய்யும் விமானங்கள் வெளியே விடும் கரிம கழிவுகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு அந்தப் பொறுப்பை பயணிகள் ஈடுசெய்யும் வகையில் இந்த வாய்ப்பு கிட்டவிருக்கிறது.
இதற்கான செயல்திட்டம் ஒன்றை நேற்று எஸ்ஐஏ குழுமம் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக அவர்கள் குறிப்பிட்ட இணையத்தளங்களில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக அல்லது அதற்குப் பிறகு கரிம ஈட்டுச் சான்றிதழ்களை வாங்கியும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றலாம்.
எஸ்ஐஏ சரக்கு வாடிக்கையாளர்களுக்கான இணையத்தளம் அடுத்த மாதம் முதல் தயாராகும்.
நிறுவனங்கள் இந்தச் செயல்திட்டத்தில் இந்த ஆண்டு நான்காவது காலாண்டு முதல் பங்கெடுத்துக் கொள்ளலாம்.
இந்தச் செயல்திட்டம் தொடங்கிய பிறகு ஆறு மாத காலத்திற்கு பயணிகள் கொள்முதல் செய்யும் கரிம ஈட்டுச் சான்றிதழ்களை எஸ்ஐஏ நிறுவனமும் ஸ்கூட் நிறுவனமும் ஈடுசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

