இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் திருமதி அஞ்சலியும் (படம்) அவரது குடும்பத்தாரும் சிங்கப்பூருக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
நல்ல எதிர்காலத்துக்கு வழிவகுத்திருக்கும் சிங்கப்பூருக்கு தங்களது பங்கினை ஆற்றும் கடப்பாட்டுடன் இதர சமூகப் பங்காளிகளுடன் சேர்ந்து முதியோர்களுக்கு உணவு விநியோகம் செய்தல், அவர்களை மருத்துவச் சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லுதல், போன்ற நடவடிக்கைகளில் 44 வயதாகும் திருமதி அஞ்சலி குமார் ஈடுபட்டு வந்தார்.
மேலும் ஆக்கப்பூர்வமான வழிகளில் தாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்லிஃப்ட் எனப்படும் குடும்ப மேம்பாட்டு செயல்திட்டங்களில் ஒன்றான குடும்ப நண்பர், முன்னோடித் திட்டத்தில் (Family Befriender) இணைந்துகொண்டார். நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் திட்டம் அது. அதற்குறிய பயற்சிகளும் அவருக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது.
8 வயது முதல் 21 வயது வரை உள்ள 6 பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தினருடன் இத்திட்டத்தின் வழி திருமதி அஞ்சலி அறிமுகம் ஆனார்.
அக்குடும்பத்தின் இல்லத்தரசியான தாயாருக்கு அண்மையில் புற்றுநோய் உள்ளது தெரியவந்தது. அத்துடன் ஒரு கிடங்கு ஊழியராக அவரது கணவர் பணியாற்றிவந்தார். கடந்த ஆண்டு, செரிமானப் பிரச்சினைகளால் பாதிப்படைந்த கணவர், அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்ததால், தற்பொழுது அவர் உடல்நலம் தேரி வருகிறார். அதனால் அவர் வெகு நேரம் பணியாற்ற முடியாமல் போனது.
குடும்பத்தின் மூத்த மகன் முழு நேர தேசிய சேவை புரிந்துகொண்டிருக்கிறார். வெவ்வேறு மருத்துவப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மற்ற மூன்று பிள்ளைகள், தற்போது தொடக்கப் பள்ளியில் பயில்கின்றனர்.மாதத்தில் ஒரு முறையாவது இந்தக் குடும்பத்தை திருமதி அஞ்சலி சந்திக்கச் செல்கிறார். மற்ற சந்தர்ப்பங்களில் அத்தாயாரை தொலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து திருமதி அஞ்சலி உரையாடுவார்.
நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்தக் குடுபத்துக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக சேவை அலுவலகம் உதவிவருகின்றது.
கூடுதலாக மற்ற சமூகப் பங்காளிகளைத் தொடர்புகொண்டு, மளிகைப் பொருட்களை அக்குடும்பத்துக்குக் கிடைக்க திருமதி அஞ்சலி உதவி வருகின்றார்.
"தொடக்கத்தில் அப்லிப்ஃட் குடும்ப நண்பர் திட்டத்தில் சேர்ந்தபோது, நான் உதவப்போகும் குடும்பத்தின் நம்பிக்கையை எப்படி பெறப்போகிறேன் என்ற ஐயம் இருந்தது. ஆனால் என்னை ஏற்றுக்கொண்டு குடும்ப பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில் ஒரு இயல்பான உறவை என்னால் நிலைநாட்ட முடிந்தது" என்று கூறினார் திருமதி அஞ்சலி.
தமக்கும் இரு பிள்ளைகள் இருப்பதால், குழந்தைகளின், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்நோக்கும் சவால்களைத் தாம் உணர்வதாகவும், அது குறித்த உதவிகளை அக்குடும்பத்துக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் திருமதி அஞ்சலி குறிப்பிட்டார்.
உதாரணமாக குடும்பத்தின் மூத்த மகனுக்கு அடிப்படை நிரலிடும் திறன்களை இலவசமாக கற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதை குடும்பத்தினரிடம் திருமதி அஞ்சலி தெரிவித்துள்ளார். "அவர்களால் சுயமாக முயற்சி செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்ற ஊக்கம் தருவது முக்கியம். அந்த வகையில் கல்வி அதற்கு இன்றியமையாத பங்காற்ற முடியும் என்று நம்புகின்றேன்" என்றார் திருமதி அஞ்சலி.
இவரின் அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பைப் பார்த்து உற்சாகம் அடைந்துள்ள அவரது கணவர் திரு. பங்கஜ் குமார், 45, கூடிய விரைவில் அப்லிஃப்ட் சமூக முன்னோடி, குடும்ப நண்பர் திட்டத்தில் இணையவுள்ளார்.
சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டாக்க முடிவதில் மகிழ்ச்சி அடையும் இத்தம்பதியினர் தொடர்ந்து வெவ்வேறு சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்சேவையாற்ற கடப்பாடு கொண்டுள்ளனர்.

