தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டாலும் உடல்நிலை பாதிக்கப்படாமல் இருந்தால் அது தலைசிறந்த பாதுகாப்பாக இருக்கும்.
அத்தகைய ஒருவர், கொவிட்-19 கிருமி எப்படி உருமாறி வந்தாலும் அதற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று டியுக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் பேராசிரியர் ஊய் எங் யோங் தெரிவித்து இருக்கிறார்.
தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவருக்குத் தொற்று இருந்தும் அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் அவரின் உடலில் அதிக மீள்திறன் இருப்பதாக பொருள் என்று அவர் நேற்று இணையக் கருத்தரங்கில் தெரிவித்தார்.
'கொவிட்-19 கிருமியுடன் வாழ்க்கை: எப்போது, எப்படி?' என்ற தலைப்பில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாட்டில் நேற்று அந்தக் கருத்தரங்கு நடந்தது.
ஒருவரின் உடலில் கிருமி புகும்போது கிருமியின் புறத்தே உள்ள புரதப்பொருட்களை அடையாளம் தெரிந்துகொள்வது எப்படி என்பதை இப்போதைய தடுப்பூசிகள் நம் உடலுக்குப் போதிக்கின்றன.
இருந்தாலும் கிருமி உருமாறும்போது அதனுடைய புறத்தோற்றம் மாறுதல் அடையக்கூடும்.
தடுப்பூசி போட்டுக்கொண்டவருக்குத் தொற்று ஏற்படும்போது, கிருமியின் அனைத்துப் பகுதிகளையும் பற்றி நம்முடைய உடல் நன்கு தெரிந்துகொள்ள வழி பிறக்கிறது.
இதனால் கிருமி எப்படி உருமாறி வந்து தாக்கினாலும் அதற்கு எதிரான பாதுகாப்பு உடலில் ஏற்படுகிறது என்று பேராசிரியர் ஊய் விளக்கினார்.
ஒருவர் உடலில் எந்த அளவுக்குக் கிருமி எதிர்ப்பு புரதப்பொருள் இருக்கிறதோ அந்த அளவுக்குச் சிறந்த முறையில் அவருக்குப் பாதுகாப்பு இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய தொற்றுநோய் நிலையத்தின் நிர்வாக இயக்குநர் பேராசிரியர் லியோ யீ சின் கூறியதை அவர் ஒப்புக்கொண்டார்.
இருந்தாலும் நோய் எதிர்ப்பு புரதப்பொருட்கள் எப்போதுமே உடலில் நிரந்தரமாக இருந்து வருவதில்லை என்பதை அவர் சுட்டினார்.
ஒருவரின் உடலில் இருக்கக்கூடிய நோய்த் தடுப்பாற்றல், தேவை இல்லை எனில் நோய் எதிர்ப்பு புரதப்பொருட்களை அதிகளவில் வைத்திருப்பதில்லை என்று பேராசிரியர் ஊய் கூறினார்.
இருந்தாலும் அத்தகைய புரதப் பொருட்களை எப்படி உருவாக்குவது என்பது நோய் தடுப்பாற்றலுக்குத் தெரியும். மீண்டும் கிருமி உடலில் புகும்போது உடனடியாக கிருமி எதிர்ப்பு புரதப்பொருட்களை உருவாக்கி உடலைப் பாதுகாக்க நோய்த் தடுப்பாற்றல் முயலும். இதற்குச் சில நாட்கள் பிடிக்கும்.
இந்த நிலையில், கிருமி உடலின் உள்ளே புகுவதற்கு வேகமாக முயலும். அதை ஒழிக்க உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மும்முரமாகச் செயல்படும். இரண்டுக்கும் இடை யில் போட்டாபோட்டி நிலை ஏற்படும் என்று அவர் கூறினார்.
தொடக்கத்தில் தலைகாட்டிய கிருமி பாதிப்புகளைவிட டெல்டா உருமாறிய கிருமி அதிகம் பேரை பாதித்து இருக்கிறது என்பது இன்றுவரைப்பட்ட தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது என்பதையும் பேராசிரியர் சுட்டினார்.
கிருமி நம்முடைய உடலில் உள்ள உயிரணுக்களில் நுழைந்து இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதை நோய் எதிர்ப்புப் புரதப்பொருட்கள் தடுக்கின்றன.
ஆனால் கிருமி உயிரணுவின் உள்ளே புகுந்துவிட்டால், அந்தப் புரதப்பொருட்கள் செயலிழந்துவிடும். இருந்தாலும் உடலில் இருக்கும் வெள்ளை அணுக்கள் பாதிக்கப்பட்ட உயிரணுக்களை, கிருமி மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் கொன்றுவிட முயலும்.
ஆனாலும் கோடிக்கணக்கான கிருமிகள் உயிரணுக்களுக்குள் பல்கிப் பெருகும்.
கிருமியின் வெளிப்பக்கம் இருக்கும் புரதப்பொருட்களைத் தெரிந்துகொள்ள வெள்ளை அணுக்களுக்கு இப்போதைய தடுப்பூசிகள் பயிற்சி அளிக்கின்றன.
ஆனால் கிருமி உருமாறி அதனால் கிருமியின் வெளிப்புற புரதப்பொருள் மாற்றமடையும்போது அந்தக் கிருமியை எதிர்த்துப் போராடுவதில் வெள்ளை அணுக்களின் பலம் குறைந்துவிடும் என்று பேராசிரியர் ஊய் தெரிவித்தார்.

