சிங்கப்பூரில் உள்ள எல்லா தாதிமை விடுதிகளும் அடுத்த வாரத்தில் விரைவுப் பரிசோதனைக் கருவியைப் பெறும். தாதிமை விடுதிகளில் உள்ளவர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் அடிக்கடி கொவிட்-19 பரிசோதனைகள் நடப்பதற்கு ஏதுவாக அந்தக் கருவி விநியோகிக்கப்படும்.
பரிசோதனைகள் முடுக்கிவிடப்படுவதால், தொற்று முன்னதாகவே கண்டறியப்பட்டு அதைத் தடுக்க வழி ஏற்படும் என்று 'ஒருங்கிணைந்த பராமரிப்பு முகவை' என்ற அமைப்பு வியாழக்கிழமை அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
நான்கு தாதிமை விடுதிகளில் கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள் தலைகாட்டி இருக்கின்றன. அவற்றில் ஒன்றான ஆரஞ்ச் வேலி தாதிமை விடுதி தொற்றுக் குழுமத்தில் 14 பேர் பாதிக்கப்பட்டனர்.
புக்கிட் பாத்தோக்கில் இருக்கும் ரென் சி விடுதி குழுமத்தில் 34 பேரும் வெஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் ஜாமியா விடுதியில் 13 பேரும் ஜூரோங் ஈஸ்ட்டில் இருக்கும் ஆல் செயின்ட்ஸ் விடுதியில் 12 பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது நேற்று தெரியவந்தது.

