கொரோனா கிருமியின் பாதிப்பு ஒருவரது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்தே அமைகிறது. கிருமிப் பாதிப்பிலிருந்து தற்காக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்ப்பதும் முக்கியம்.
நோய் எதிர்ப்பாற்றலானது பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிகள், தொற்று நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. பிறப்பிலேயே உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி, வளரும்போது பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி, குழந்தைப் பருவத்தில் போடப்படும் தடுப்பூசிகளான நோய்த் தடுப்பு மருந்துகளால் ஏற்படும் எதிர்ப்பு சக்தி, ஆண்டுதோறும் போட்டுக்கொள்ளும் தடுப்பூசி மூலம் பெறப்படும் நோய் எதிர்ப்பு சக்தி முதலிய வழிகளில் உடல் நோய் எதிர்ப்பாற்றலைப் பெறுகிறது. இந்த செயல்முறைக்கு உணவு பெரிதும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் உணவுகள்
தானியம், விதைகள், பருப்புகள் போன்றவை இயற்கையாகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதை போன்றவை புரதமும் இரும்பு சத்தும் நிறைந்தவை. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இவை அவசியமானதாக உள்ளன.
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க இஞ்சி, லவங்கப்பட்டை, ஏலக்காய், மிளகு, தேநீர் போன்ற பானங்கள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மூலிகை தேநீரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன.
மஞ்சள், தேன் கலந்த பால் இரண்டும் ஆண்டிஜென், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. மன அழுத்தத்தை குறைக்கவும் இவை உதவுகின்றன.
பூண்டு, சூடான சூப் போன்ற வையும் உடலுக்கு உகந்தவை.
நாள் முழுவதும் எப்போதும் நீரேற்றமாக இருப்பது முக்கியமாகும். மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் நீர் குடிக்குமாறு பரிந்துரைக்கின்றனர். உடல் நச்சுக்களை வெளியேற்ற தண்ணீர் உதவுகிறது.
வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உண்ணலாம். நெல்லிக்காய் 'வைட்டமின் சி' நிறைந்த ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுவதோடு, குளிர் காரணமாக ஏற்படும் வைரஸ் நோய்களை தடுக்கவும் இது உதவுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தில் உயிர் வேதியியல் எதிர்வினைகளை வலுப்படுத்த வைட்டமின் பி 6 உணவுகள் முக்கியமாகும். இது நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பாதுக்காக்க உதவுகிறது. ஓட்ஸ், கோதுமை, பழுப்பு அரிசி, சோயா பீன்ஸ், சமைத்த முட்டை போன்ற உணவுகளில் வைட்டமின் பி6 அதிகம் உள்ளது.
'வைட்டமின் ஈ' சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். இது உடலில் தொற்றுநோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இந்த உயிர்ச்சத்துள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வாழ்க்கை முறை மாற்றங்களும் மிகவும் உதவுவதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
யோகா பயிற்சிகள் சுவாசத்தை மேம்படுத்தவும் சீராக்கவும் உதவுகிறது. இதனால் நுரையீரல் விரிவடைகிறது. தசைகளின் ஆரோக்கியத்திற்கும் யோகா முறை உதவுகிறது.
ஆழ்ந்த தூக்கமும் ஓய்வும் மிக முக்கியம். தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னதாக இரவு உணவை உண்பது, மின்னியல் சாதனங்களையும் கைபேசியையும் அடைத்துவைத்து விடுவதும் நல்ல ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும். புத்தகம் வாசிப்பது, இசை கேட்பது போன்றவை தூக்கத்தை இதமாக்கும்.
படுக்கச் செல்லும் முன்னர் மனதிலுள்ள கவலைகள், பிரச்சினைகள், கோபதாபங்களை ஒதுக்கிவைத்து விட்டு, அமைதியாக தூங்குவது மிக முக்கியம். இத்தகைய செயல்முறைகள் உடல் உறுப்புகளையும் மூளைச் செயல்பாட்டையும் அமைதிப்படுத்தி, நல்ல தூக்கத்தைத் தரும்.
உடல் தன்னைச் சீர்படுத்திக்கொள்ளவும், இழந்த உயிரணுக்களை மீண்டும் உற்பத்தி செய்யவும் சில மணி நேர ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது.

