களத்தில் எதிரிகள் என்றாலும் தங்களுக்கு இடையிலான பாசம் இன்னும் அப்படியே தொடர்கிறது என்பதை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்த இந்தப் புகைப்படம், இப்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஆடுகளத்தில் என்ன நிகழ்ந்தாலும் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் நிலைமையை அமைதியாகக் கையாளக்கூடியவர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் டோனி (படத்தில் இடது). அதற்கு நேர்மாறான இப்போதைய தலைவர் விராத் கோஹ்லி (வலது), திடலிலேயே தமது உணர்ச்சிகளைக் கொட்டி விடுவார்.
இந்நிலையில், டோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கோஹ்லியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் மோதின.
மணற்புயல் காரணமாகப் பூவா தலையா போடுவதில் தாமதமானது. அதற்காகக் காத்திருந்த நேரத்தில் டோனியும் கோஹ்லியும் நெருக்கமாக சிரித்துப் பேசி மகிழ்ந்ததைக் கண்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

