இளையர் மேம்பாட்டில் அக்கறை செலுத்தும் குழுக்களுக்கு வெகுமதி
அடுத்த ஆண்டில் இருந்து சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்களின் முற்பாதியில் 23 வயதிற்குட்பட்ட ஒரு வீரரை மட்டுமே களமிறக்க முடியும். இப்போது அந்த வரம்பு மூன்றாக இருக்கிறது.
அதே வேளையில், ஒரு குழுவில் 23 வயதிற்குட்பட்ட வீரர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும் பதிவுசெய்திருக்கலாம்.
அத்துடன், இளையர் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் குழுக்களுக்கு பண வெகுமதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நேற்று நடந்த மெய்நிகர் கூட்டத்தில் சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்தின் தலைவர் லிம் கியா டோங் இவற்றை அறிவித்தார்.
"எங்களது காற்பந்துத் திட்டங்களில் இளையர் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது ஒருங்கிணைந்த அங்கமாக நீடிக்கும். அதே நேரத்தில், நமது தொழில்முறைக் காற்பந்துக் குழுக்கள் வட்டார அளவிலும் அனைத்துலக அளவிலும் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.
"விதிமாற்றம் வீரர்கள் தேர்வில் அதிக நீக்குப்போக்கையும் 23 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் கூடுதல் நேரம் விளையாடும் வாய்ப்பையும் அளிக்கும். இதன்மூலம் லீக் போட்டிகளில் வீரர்கள் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தவும் அதிக வாய்ப்பு கிட்டும்," என்று திரு லிம் கூறினார்.
உள்ளூரில் அதிகளவில் இளம் வீரர்களை உருவாக்கும் நோக்கில் இந்த விதி 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு வரவேற்பும் இருந்தது, எதிர்ப்பும் கிளம்பியது.
விதியில் மாற்றம் இடம்பெறலாம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கடந்த மாதமே செய்தி வெளியிட்டிருந்தது. அப்போது, தேசிய அணியின் பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா இந்த விதிமாற்றத்தை வரவேற்றுள்ளார்.
"அந்த விதி தேசிய அணியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல. ஏனெனில், போதிய திறமை இல்லாதபோதும் 23 வயதிற்குட்பட்ட மூவரைக் களமிறக்கியாக வேண்டும். இதனால் மூத்த வீரர்கள் அதிக நேரம் விளையாடும் வாய்ப்பை இழக்கலாம்," என்று அவர் கூறியிருந்தார்.

