பார்சிலோனா: முன்னணி ஸ்பானிய காற்பந்துக் குழுவான பார்சிலோனாவின் பயிற்றுவிப்பாளர் ரோனல்ட் கூமனுக்கு (படம்) இரண்டு ஆட்டங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காடிஸ் - பார்சிலோனா குழுக்கள் மோதிய ஆட்டம் கோலேதுமின்றிச் சமநிலையில் முடிந்தது. அந்த ஆட்டத்தின்போது ஆத்திரத்தை வெளிப்படுத்தி, ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் கூமனுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
அச்சம்பவம் குறித்து விசாரித்த ஸ்பானிய காற்பந்துக் கூட்டமைப்பின் ஒழுங்குமுறைக் குழு, கூமனுக்கு இரண்டு ஆட்டங்கள் தடை விதித்தது.
இதனையடுத்து, லெவான்டே, அட்லெட்டிகோ மட்ரிட் குழுக்களுக்கு எதிராக அடுத்து நடக்கஇருக்கும் ஆட்டங்களின்போது, கூமன் எல்லைக்கோட்டருகே இருந்தபடி தம் குழுவினர்க்கு அறிவுறுத்தல் வழங்க முடியாது.
இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள பார்சிலோனா குழு ஒன்பது புள்ளிகளுடன் ஸ்பானிய காற்பந்து லீக் பட்டியலில் ஏழாமிடத்தில் உள்ளது. இதனால் கூமனுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் பதவியில் இருந்து அகற்றப்படலாம் என்ற தகவலும் வெளியான வண்ணம் இருக்கிறது.
இதனிடையே, கூமனுக்கு விதிக்கப்பட்ட தடையை ஓர் ஆட்டமாகக் குறைக்கக் கோரி மேல்முறையீடு செய்யப்போவதாக பார்சிலோனா தெரிவித்துள்ளது.

