ஒரு குழந்தைக்குத் தாயாக வேண்டும் என்பது திருவாட்டி புவாவின் நீண்டநாள் கனவு. ஆனால் 27 வயதில் திருமணம் செய்துகொண்ட அவரால் ஏழு ஆண்டுகள் ஆன பின்னரும் தம் கணவருடன் உறவு கொள்ள முடியவில்லை.
ஒவ்வொரு முறையும் கணவன், மனைவி இருவரும் உறவுகொள்ளும் முயற்சியில் இறங்கும்போது, கடும் வலியில் துடிக்கும் திருவாட்டி புவா அழுதுவிடுவார்.
"ஏதோ பயங்கரமாக என்னை மோதுவது போன்ற உணர்வு ஏற்பட்டது," என்று சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மூத்த நிர்வாகியாகப் பணியாற்றும் அவர் தெரிவித்தார்.
இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் மூண்டன. இறுதியில் 2016ஆம் ஆண்டில் இருவருக்கும் விவாகரத்தானது.
அதற்கு மறு ஆண்டே திருவாட்டி புவா உதவிபெற கேகே மகளிர், சிறார் மருத்துவமனையின் (கேகேஎச்) பெண்கள் சுகாதார, நல நிலையத்திலுள்ள பாலியல் சுகாதார மருந்தகத்தை நாடினார். தமக்கு 'வெஜனிஸ்மஸ்' என்ற பிரச்சினை இருப்பதாக அங்கு கண்டுபிடிக்கப்பட்டது.
'வெஜனிஸ்மஸ்' என்றால்..
இப்பிரச்சினை உள்ள மாதருக்குப் பெண் உறுப்புத் தசைகள், தானே இறுகிக்கொண்டு ஆண் உறுப்பைப் புகாமல் தடுப்பதுடன் வலி, எரிச்சல் அல்லது சுரீரென்ற உணர்வு ஏற்படும்.
'வெஜனிஸ்மஸ்' பிரச்சினை உள்ளவர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் அதிகரித்து வருகிறது. 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கேகேஎச்சின் பாலியல் சுகாதார மருந்தகத்தில் கடந்த ஆண்டு பதிவான 100 புதிய சம்பவங்கள், 60% அதிகரிப்பாகும்.
விழிப்புணர்வு அதிகரித்துள்ளது
பொதுமக்கள் மட்டுமின்றி சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்கள் இடையேயும் விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் சம்பவங்கள் கூடுதலாகியுள்ளன என்று கேகேஎச்சின் இனப்பெருக்க மருத்துவப் பிரிவில் ஆலோசகராக உள்ள டாக்டர் டான் ஸ்செ யெயுன் கூறினார்.
பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினை தொடர்பில் பலதுறை மருந்தகம் அல்லது தனியார் மருந்தகத்தில் ஆலோசனை பெற்றுவிட்டு மருத்துவ நிபுணர்களை நாடி, மகளிர் தொடர்பான பிரச்சினை அல்ல என்பதை உறுதிப்படுத்துவர்.
மகப்பேறு மருத்துவர் அல்லது மகளிர் மருத்துவ நிபுணர் பின்னர் கேகேஎச்சின் பாலியல் சுகாதார மருந்தகத்துக்குச் செல்ல பரிந்துரை செய்வர். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் (என்யுஎச்) கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு 'வெஜனிஸ்மஸ்' பிரச்சினை தொடர்பான சம்பவங்கள் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான நோயாளிகள் இது தொடர்பில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக்கொண்டு நிபுணத்துவ உதவி நாடுவதாக டாக்டர் சூசன் லோகன் கூறினார். இவர் என்யுஎச்சின் மகப்பேறு, மகளிர் மருத்துவப் பிரிவில் மூத்த ஆலோசகராக இருக்கிறார்.
சமூக ஊடகங்கள், இணையம் வழி 'வெஜனிஸ்மஸ்' குறித்து பெண்கள் தகவல் அறிந்துகொள்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
'வெஜனிஸ்மஸ்' ஏற்படக் காரணம்
பாலியல் ரீதியாக போதிய தகவல்களை அறிந்திருக்காதது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஏற்கெனவே ஆளாகியிருப்பது அல்லது வேதனை தந்த பாலியல் அனுபவம் போன்றவற்றுடன் 'வெஜனிஸ்மஸ்' தொடர்புபடுத்தப்படுகிறது.
கண்டிப்பான வளர்ப்புமுறையுடனும் இதைத் தொடர்புபடுத்தப்படலாம். பாலியல் உறவு கொள்வது தவறு, குற்றம் என்ற சமய, கலாசார நம்பிக்கை அடிப்படையிலும் இந்த அறிகுறி ஏற்படலாம்.
இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் அல்லது குழந்தை பெற்றவர்களுக்கும் இப்பிரச்சினை ஏற்படும் வாய்ப்புண்டு.
உதவி நாடி வருவோர்
இந்தியா, மலேசியா, இந்தோனீசியா நாடுகளைச் சேர்ந்தோர், தம் உதவியை நாடி வருவதாக உறவுகள் தொடர்பில் ஆலோசகராகவும் மருத்துவ பாலியல் நிபுணராகவும் உள்ள டாக்டர் மார்த்தா டாரா லீ கூறினார்.
'வெஜனிஸ்மஸ்' என்பது ஓர் 'ஆசிய பிரச்சினை' என்றார் அவர்.
கேகேஎச்சின் பாலியல் சுகாதார மருந்தகத்திற்கு வரும் பெரும்பாலான 'வெஜனிஸ்மஸ்' நோயாளிகள், தங்கள் 30களில் உள்ளவர்கள் என்றும் திருமணத்திற்குப் பின் உறவுகொள்ள முடியாத நிலையில் அல்லது குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ள நிலையில் இப்பிரிவினர் உதவி நாடுவதாக டாக்டர் டான் குறிப்பிட்டார்.
செல்லாத் திருமணம் அல்லது மணவிலக்கு என்று கணவன்மார் மிரட்டும்போது பெண்கள் உதவி நாடி என்யுஎச் வருவதாக டாக்டர் லோகன் தெரிவித்தார்.
திருமண உறவு பாதிப்பு
கணவன் மனைவி இடையே விரிசல், உறவில் முறிவு, உளவியல் ரீதியான துன்புறுத்தல், கள்ளத் தொடர்பு, மணவிலக்கு போன்ற சூழ்நிலைகளுக்கு 'வெஜனிஸ்மஸ்' பிரச்சினை இட்டுச்செல்லலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
'வெஜனிஸ்மஸ்' பிரச்சினையைக் கையாள, பன்முகத்தன்மை வாய்ந்த ஓர் அணுகுமுறை தேவைப்படலாம். மருத்துவப் பிரச்சினைகளுக்குச் சிகிச்சை அளிப்பது, பாலியல் கல்வி புகட்டுவது, உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் உத்திகளைக் கையாள்வது, இடுப்புத் தசைகளுக்குப் பயிற்சியளிப்பது, உறவு ஆலோசகரை நாடுவது போன்ற வெவ்வேறு வழிகளில் 'வெஜனிஸ்மஸ்' பிரச்சினையைச் சமாளிக்க முயலலாம்.
சிகிச்சை பெற்றதன் பலன்
சிகிச்சை பெற்ற ஓர் ஆண்டில், 67 முதல் 93% பெண்களால் வெற்றிகரமாக உறவுகொள்ள முடிந்தது. அதே ஓர் ஆண்டுக்குள் குழந்தை பெற்றுக்கொள்ளும் நிலையை 50% தம்பதியரால் அடைய முடிந்ததாக கேகேஎச் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. 'வெஜனிஸ்மஸ்' பிரச்சினையைத் தம்பதியர் பலர், தங்களுக்குள்ளேயே வைத்துக்கொள்வதைக் குறிப்பிட்டார் டாக்டர் லோகன். தற்போதைய காலகட்டத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள பாலியல் உறவு தேவையில்லை என்ற நிலை வந்துவிட்ட போதிலும் பிரச்சினைக்குச் சிகிச்சை நாடுவது முக்கியம் என்றார் அவர்.
"ஆண் பெண் இருவரது சுயமரியாதை, தன்னம்பிக்கைக்காக சிகிச்சை நாடுவது முக்கியம். இல்லையேல், கண்முன்னே தீர்வு இருந்தும் அதைக் கண்டுகொள்ளாத நிலை என்றாகிவிடும்," என்றார் அவர்.

