மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டி தரவரிசையில் நேற்றுவரை முதல் இடத்திலிருந்த லிவர்பூல் அணிக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என்ற மான்செஸ்டர் சிட்டியின் எண்ணம் வீண்போகவில்லை.
நேற்று முன்தினம் பின்னிரவில் அதன் சொந்த மைதானத்தில் பர்ன்லியை எதிர்கொண்ட சிட்டி குழு ஆட்டத்தை விறுவிறுப்புடன் தொடங்கவில்லை. இதுவரை எந்தக் குழுவையும் வெற்றி கொள்ளாத பர்னிலிக்கு எதிராக சிட்டி குழு அப்படி ஒன்றும் எளிதில் வெற்றிக்கொடி நாட்டிவிடவில்லை.
வார தொடக்கத்தில் தனக்கு அதிகம் விளையாடும் வாய்ப்புக் கிட்டுவதில்லை என்ற வருத்தத்தில் தான் வேறு குழுவுக்கு செல்ல விரும்புவதாக சூசகமாக அறிவித்த ரஹீம் ஸ்டெர்லிங்கை நேற்றைய ஆட்டத்தில் ஆரம்பத்திலிருந்தே களமிறக்கினார் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா. எனினும், அவர் பெரிதாக சோபிக்கவில்லை என்றே செய்தித் தகவல்கள் கூறுகின்றன. இதேபோல், சிட்டி தாக்குதல் வரிசையில் இடம் பிடித்திருந்த மற்றொரு தாக்குதல் ஆட்டக்காரரான ரியாட் மாஹ்ரேசும் வெட்டியாக பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார் என்றே காற்பந்து விமர்
சகர்கள் விளாசித் தள்ளுகின்றனர். எது எப்படியோ, ஆட்டத்தின் 12ஆம் நிமிடத்தில் சிட்டியின் பெர்னாடோ சில்வா, ஃபில் ஃபோடன் அடித்த பந்தை பர்ன்லி கோல்காப்பாளர் தடுத்து பந்து தன்பக்கம் வரவே, சிட்டியின் முதல் கோலைப் போட்டு கார்டியோலா நிம்மதிப் பெருமூச்சு விட வழிவகுத்தார்.
பின்னர், ஆட்டத்தின் 70ஆம் நிமிடத்தில் பர்ன்லியின் தற்காப்பு வீரர்கள் செய்த தவற்றை பயன்
படுத்திக்கொண்ட சிட்டியின் கெவின் டி பிரய்ன தமது அணி சார்பாக இரண்டாவது கோலைப் போட்டு மான்செஸ்டர் சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.
பிரிமியர் லீக் தரவரிசையில் 17 புள்ளிகள் பெற்று மூன்றாவது நிலையில் இருக்கிறது சிட்டி குழு.

