வெல்க்ரோ வேஷ்டிகளின் காலம் போய் இப்போது கச்சிதமாகப் பொருந்தும் 'ரெடி மேட்' சேலைகள் கடைகளை நிரப்புகின்றன. ஒரு சேலையை தனியாக சரியாக கட்டுவதற்கு குறைந்தது 15 நிமிடங்கள் எடுக்கும், ஆனால் 15 நொடிகளுக்குள் கட்டிவிடும் அளவிற்கு சேலை கட்டுவதை எளிமையாகிவிட்டது 'ரெடிமேட்' சேலைகள். வெளிர் நிறங்களில் சேலைகள், கல்யாணி காட்டன் சேலைகள், வெள்ளி ஜரிகை சேலைகள், யானை பார்டர் சேலைகள் என இவ்வாண்டு சுடிதார், லெஹெங்காவை விட பலரின் கவனம் சேலைகளின் பக்கம்தான் திரும்பியிருக்கிறது. நமது பாட்டி காலத்தில் அணியப்பட்ட சேலைகளெல்லாம் இப்போது மீண்டும் பேஷன் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக கல்யாணி காட்டன் சாரிகள் நமது பாட்டிமார்கள் அணியும் சேலைகள் போலவே உள்ளன. இணைய வர்த்தகர்களுக்குப் போட்டியாக லிட்டில் இந்தியா கடைக்காரர்களும் புதுமையான சேலைகளை இறக்கி மீண்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்க முயல்கின்றனர்.
"மிக எளிமையான சேலைகளைத்தான் வாடிக்கையாளர் விரும்பி வாங்குகின்றனர். அதிக கொண்டாட்டங்கள் இல்லாததால் எப்போது வேண்டுமானாலும் அணிந்துகொள்ளக்கூடிய சேலைகளை வாங்கி செல்கின்றனர்.
ஒரு வாடிக்கையாளர் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சேலை வாங்கிச் செல்வதாக கூறினார்," என்று சிரித்துக்கொண்டே சொன்னார் சிங்கப்பூரில் பிரபலமாகிவரும் 'பட்டுக்கடை' என்னும் சேலை கடையின் உரிமையாளர் குமாரி காயத்ரி. இவரது கடையில் காஞ்சிபுரத்திலிருந்து பட்டுச் சேலைகள், வடஇந்தியாவிலிருந்து கைத்தறி சேலைகள், ஆந்திராவிலிருந்து காட்டன் சேலைகள் என பல வகை சேலைகள் (தலைப்பிற்கு மேல் உள்ள படம்) விற்பனையாகின்றன. இணைய வர்த்தகமான 'பட்டுக்கடை' இப்போது தற்காலிகமாக தீபாவளிக்கு அப்பர் டிக்சன் சாலையில் உள்ள ஓரிடத்தில் ஒரு கடையை திறந்துள்ளது.
பாதுகாப்பான கொண்டாட்டத்திற்கு அழகிய முகக்கவசங்கள்
முகக்கவசம் என்பது அன்றாடம் நாம் உடுத்தும் ஆடையை போல் ஆகிவிட்டது. முகக்கவசம் இல்லாமல் வீட்டை விட்டு செல்ல முடியாது. இந்நிலையில், தீபாவளிக்கு அணியும் ஆடைக்கு ஏற்ப அதே நிறத்தில்,
வடிவமைப்பில் இப்போது முகக்கவசமும் வந்துவிட்டது.
தேக்கா சந்தையில் விற்பனையாகும் ஆடைகள் ஒவ்வொன்றிற்கும் அதற்கு பொருத்தமான முகக்கவசமும் ஆடையோடு விற்கப்படுகிறது.
தேக்கா சந்தை தையல்காரர்கள் தீபாவளி காலத்தில் சேலை ரவிக்கைகளை ஓய்வின்றி தைக்கும் காலம் போய் இப்போது அழகழகாக ஆடைகளுக்கு பொருத்தமான முகக்கவசங்களையும் தைத்துவருகின்றனர்.

