தனிமை உத்தரவில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதன் காரணமாக பயணிகள் வருகை அதிகரிக்கும்.
இதைக் கருத்தில்கொண்டு குடிநழைவு அனுமதி நடைமுறையை வேகப்படுத்தும் நோக்கத்தில், சாங்கி விமான நிலையத்தில் மேலும் பல பகுதிகளைத் திறந்து விடமுடியும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஒரே நேரத்தில் பல விமானங்கள் தரையிறங்கும் பட்சத்தில், பயணிகள் தேக்கத்தைக் குறைக்கும் வகையில் இதர குடிநுழைவுக் கூடங்களுக்குப் பயணிகளைத் திருப்பிவிடுவது குறித்து சாங்கி விமான நிலையக் குழுமத்துடன் சேர்ந்து குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் செயல்படும்.
இந்த ஆணையம், சாங்கி விமான நிலையத்தில் இம்மாதம் 29ஆம் தேதி முதல் தானியங்கி அனுமதி இயந்திர வழிகளை திறந்திருக்கிறது. அதன்மூலம் சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் வேகமாக அனுமதி பெற்று உள்ளே வர இயலும்.
பயணி ஒருவர் விமான நிலையத்தில் இருந்து வெளிவருவதற்கு தேவைப்படக்கூடிய ஒட்டுமொத்த நேரம், கொவிட்-19 தொற்றுக்கு முன்பு இருந்த அளவுக்குக் குறைந்துவிடும் என்று அமைச்சர் தெரிவித்தார். திரு சண்முகம், நேற்றுக் காலை விமான நிலையத்திற்குச் சென்றிருந்தார். அதற்கு பிறகு மெய்நிகரில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
பல விமானங்களும் ஒரே நேரத்தில் தரையிறங்கும்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அவர்களின் பத்திரங்களைப் பரிசோதித்து அனுமதி வழங்குவதற்கு நேரமாகக்கூடும் என்பதை அமைச்சர் சுட்டினார்.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் கூடிய தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கான எட்டு புதிய பயண ஏற்பாடுகள் (விடிஎல்) இந்த மாதம் தொடங்குகின்றன.
இவற்றின் விளைவாக சிங்கப்பூருக்கு அதிக பயணிகள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய ஒரு நிலையில் குடிநுழைவு நடைமுறைகள் செம்மையாகச் சீரமைக்கப்படுகின்றன.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயண ஏற்பாட்டின் மூலம் நான்கு விமானங்களில் வந்திறங்கிய பயணிகள், குடிநுழைவு முகப்புகளிடம் அனுமதி பெற்றதை திரு சண்முகம் விமான நிலையத்தில் நேரடியாகப் பார்த்தார்.
இணையம் மூலம் விவரங்களை ஏற்கெனவே தெரிவித்து இருந்த பயணிகள், தானியக்க வழிகள் மூலம் ஏறத்தாழ 20 முதல் 30 வினாடிகளுக்குள் அனுமதிபெற்று வெளியே வந்துவிட்டார்கள்.
அத்தகைய தானியக்கி இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத பயணிகள் குடிநுழைவு முகப்புகள் மூலம் அனுமதியைப் பெற ஏறத்தாழ எட்டு முதல் 10 நிமிடங்கள் ஆகலாம் என்பதை அமைச்சர் சுட்டினார். ஆனால் ஒரே நேரத்தில் பல விமானங்கள் தரையிறங்கும்போது குடிநுழைவு அனுமதி பெற நீண்ட நேரம் ஆகும் வாய்ப்புள்ளது.
சென்ற வாரம் இத்தகைய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒரே நேரத்தில் ஐந்து விமானங்கள் தரையிறங்கியதால் பயணிகள் அனுமதி பெற்று உள்ளே வர ஏறக்குறைய 90 நிமிடங்கள் பிடித்தது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கொவிட்-19 தொற்றுக்கு முன்பு பயணிகளை வெவ்வேறான குடிநுழைவுப் பகுதிகளுக்கு அல்லது விமான நிலையத்தின் இதர பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பும் வசதி இருந்தது. இப்போது சிரமங்கள் அதிகரித்து இருக்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
இப்போது விமான நிலைய முனையம் 1, முனையம் 3 ஆகியவை மட்டுமே செயல்படுகின்றன.
அதிக தொற்று ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வருகின்ற பயணிகளைத் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் விமான நிலையத்தில் இருக்கின்றன.
தடுப்பூசி சான்றிதழில் வேறுபாடுகள் இருப்பதன் காரணமாக சிங்கப்பூருக்குள் வர சில பயணிகளுக்குப் பிரச்சினைகள் உள்ளன. விமான நிலையத்தின் இதர பகுதிகளைத் திறந்துவிட முடியுமா என்பது குறித்தும் ஒரே மாதிரியான நடைமுறைகளைக் கொண்டிருப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
வருவதற்கு முன்பே தேவையான ஆவணங்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என்பதை இப்போது பயணிகள் நன்கு தெரிந்துகொண்டு இருப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
தனிமை உத்தரவு இல்லா பயண ஏற்பாட்டின்கீழ், வருவோர் சிங்கப்பூரில் தரையிறங்கியதும் கொவிட்-19 பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டிய நிபந்தனை உள்ளது. இது பற்றி கருத்துகூறி அமைச்சர், இதற்கு 20 முதல் 30 நிமிடங்கள் ஆகும் என்றார்.

