முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொண்ட 60 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ள முதியவர்கள் மக்கள் கழகத்தின் குறிப்பிட்ட வகுப்புகளிலும் நிகழ்வுகளிலும் நவம்பர் 1 முதல் கலந்துகொள்ள லாம். நடனங்கள், நாற்காலியில் அமர்ந்தபடி செய்யும் யோகா போன்றவை இவற்றில் அடங்கும்.
முதியவர்கள் பாதுகாப்பான சூழ்நிலையில் உடல்நலத்தோடும் சுறுசுறுப்போடும் சமூகப் பிணைப்புகளைப் புதுப்பித்துக்கொண்டும் துடிப்புடன் இருந்து வருவதற்கு ஏதுவாக குறிப்பிட்ட செயல்திட்டங்கள் மீண்டும் தொடங்கும் என்று மக்கள் கழகம் நேற்று அறிவித்தது.
முற்றிலும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டாது என்றும் மக்கள் கழகம் தெரிவித்தது.
வண்ணப் பசை ஓவியங்கள், பொழுதுபோக்கு கிராமிய நடனங்கள், திரைப்படங்களைப் பார்ப்பது, இசை நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பது போன்றவற்றில் முதியவர்கள் கலந்துகொள்ளலாம்.
இந்த வசதி அவர்களுக்கு 21 சமூக நிலையங்களிலும் மன்றங்களிலும் ஒருங்கிணைந்த சமூக மையங்களிலும் திறந்த இடங்களில் அல்லது காற்றோட்டமிக்க இடங்களிலும் கிடைக்கும். பாதுகாப்பு நிபந்தனைகள் நடப்பில் இருக்கும்.
முகக்கவசம் இல்லாமல் உள்ளரங்கு வகுப்புகளில் 30 பேர் வரை கலந்துகொள்ளலாம். என்றாலும் இருவர் இருவராகத்தான் பங்கேற்க முடியும்.
முகக்கவசங்களுடன் கூடிய உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
முதியவர்கள் உடற்பயிற்சி போன்ற முகக்கவசம் இல்லாத செயல்களில் கலந்துகொள்வதற்கு முன்னதாக அவர்களுக்குத் தொற்று இல்லை என்பதை பரிசோதனை மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
என்றாலும் பாடல், இசைக் கருவிகளை வாசிப்பது, பேச்சுப் பயிற்சி போன்ற முகக்கவசம் இல்லாத உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு இப்போது அனுமதி இருக்காது.
கரவோக்கே பாடல் வகுப்புகள், சதுரங்க விளையாட்டு போன்ற சாதனங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய வகுப்புகளும் இப்போது தொடங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் கழகம் நிலவரங்களை அணுக்கமாகக் கண்காணித்து முதியோருக்கான இந்த ஏற்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து முடிவு செய்யும்.

