வெளிநாட்டில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருடன் டெல்டா பிளஸ் (ஏஒய்.4.2) என்ற புதிய கொவிட்-19 கிருமியும் செவ்வாய்க்கிழமை இறக்குமதியாகி இருக்கிறது என்பது உறுதிபட தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
டெல்டா பிளஸ் என்பது டெல்டா என்ற கிருமி திரிந்து உருவான கிருமியாகும். டெல்டா பிளஸ் கிருமி புதுவகைக் கிருமி இல்லை என்றும் அது உருமாறிய 'டெல்டா' கிருமியின் துணைமாற்றுரு என்றும் அமைச்சு விளக்கியது.
இங்கு வந்த அந்த ஒருவரிடம் இருந்து வேறு யாருக்கும் புதிய டெல்டா பிளஸ் கிருமி பரவவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
டெல்டா பிளஸ் கிருமி எந்த அளவுக்கு வேகமாகப் பரவும் என்பதும் அது எந்த அளவுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதும் இனிமேல்தான் தெரியவரும். இது பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
இருந்தாலும்கூட டெல்டா பிளஸ் கிருமி, இதர சில டெல்டா வகை கிருமிகளைப்போல அதே அளவு வீரியத்துடன் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா பிளஸ் கிருமி அவ்வளவாக கவலை தரும் அளவுக்கு விளைவுகளை ஏற்படுத்தாது என்று உலக சுகாதார நிறுவனம் கணித்து உள்ளது.
டெல்டா கிருமி அளவுக்கு டெல்டா பிளஸ் மோசமானதாக இருக்காது என்றே வல்லுநர்கள் கூறுவதாக பிபிசி நிறுவனமும் தெரிவித்துள்ளது.
இருந்தாலும் இன்னமும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதுவரை டெல்டா பிளஸ் தொற்றியோரில் 6 விழுக்காட்டினர் பிரிட்டனில் இருக்கிறார்கள்.
அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் மேற்கு ஐரோப்பிய பகுதிகளிலும் இந்தப் புதிய வகைக் கிருமி தலைகாட்டி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே, டெல்டா பிளஸ் பற்றி கருத்துக் கூறிய லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரிப் பேராசிரியர் பிரான்கியோஸ் பாலோக்ஸ், டெல்டா பிளஸ் கிருமி, இதர ஆல்ஃபா, டெல்டா கிருமி அளவுக்கு வீரியமிக்கதாக இருக்காது என்றே தெரிவதாகவும் இருந்தாலும் அதைக் கண்காணிக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் கூறினார்.

