இந்தோனீசிய ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதிக்கு சிங்கப்பூரின் ஆக உயரிய ராணுவ விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தோனீசிய ஏர் சீஃப் மார்ஷல் ஹாடி ஜஜாந்தோவுக்கு நேற்று இஸ்தானாவில் நடந்த நிகழ்ச்சியில் தனிச் சிறப்புமிக்க சேவை விருதை (ராணுவம்) வழங்கி அதிபர் ஹலிமா யாக்கோப் சிறப்பித்தார்.
சிங்கப்பூர் ஆயுதப் படைகளுக்கும் இந்தோனீசிய ஆயுதப் படைகளுக்கும் இடையில் நீண்ட நெடுநாட்களாக இருந்து வரும் தற்காப்பு உறவுகளைப் பலப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
ஏர் சீஃப் மார்ஷல் ஹாடியின் தலைமைத்துவத்தின் கீழ் இரு நாடுகளின் ராணுவங்களும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தின.
படைவீரர்களுக்கு இடையில் அணுக்க உறவு பேணி பலப்படுத்தப்பட்டதாக அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.
மலாக்கா நீரிணை சுற்றுக் காவல், பயங்கரவாத எதிர்ப்பு தகவல் ஏற்பாடுகள் போன்ற பலதரப்பு ஏற்பாடுகள் மூலம் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் இந்தோனீசிய ஆயுதப் படைகளும் சேர்ந்து செயல்பட்டு வட்டாரப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்கு இந்தோனீசிய தலைமைத் தளபதி ஆதரவு வழங்கி இருக்கிறார் என்றும் அறிக்கை தெரிவித்தது.

