உண்பது, உடுப்பது, உறைவது என வாழ்வின் அனைத்து அத்தியாவசியச் செயல்பாடுகளிலும் நீடித்த நிலைத்தன்மையைப் பேணுவதிலும் பூமி வெப்பமடைவதைக் குறைப்பதிலும் ஒவ்வொருவரும் பங்காற்ற முடியும்.
தீபாவளிக்கு புத்தாடை வாங்கும்போது இயற்கையான பொருட்களால் நெய்யப்பட்ட துணிகளை வாங்குவோம். இந்த உடைகள் உடலுக்கும் நல்லது, இயற்கை பாதுகாப்புக்கும் உகந்தது.
'ஃபிளெக்ஸ்' செடிநாரில் நெய்யப்படும் லினன், பட்டு, பருத்தி, கம்பளி போன்ற இயற்கை நூல்களில் செய்த துணிகள் அனைவரும் அறிந்தவை.
தற்போது கற்றாழை, சணல், வாழை, மூங்கில் போன்றவற்றின் நார்களைக் கொண்டும் அன்னாசி, சோயா உள்ளிட்ட பொருட்களில் இருந்து நூல்களைத் தயாரித்தும் துணிகள் நெய்யப்படுகின்றன.
இதுபோன்று இயற்கையாகக் கிடைக்கும் தாவரங்களின் நார்களினால் உருவாக்கப்படும் துணிகள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்படும் துணிகளைக் காட்டிலும் நீண்ட ஆயுளைக் கொண்டவையாக அறியப்படுகிறது.
உதாரணத்திற்கு, நல்ல பட்டுத் துணியை முறையாகப் பராமரித்தால் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தலாம்.
இந்த இயற்கையான இழைகளுக்கு வேப்பிலை, துளசி, வேப்பம்பட்டை, மஞ்சள், சுண்ணாம்பு, கரி, பீட்ருட், நாவல் பழம், கேரட், மரத்தூள், வெல்லம் போன்ற இயற்கைப் பொருட்களில் இருந்து தாயரிக்கப்படும் வண்ணங்களே சேர்க்கப்படுகின்றன. அதனால் இவை உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கின்றன.
பட்டுச் சேலைக்கு உலகப் புகழ்பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூரில் இருக்கும் 'அனகாபுத்தூர் இயற்கை நார் நெசவுக் குழுமம்', வாழைநார், மூங்கில்நார் போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு, ரசாயனப் பொருட்கள் இல்லாத படவை, சட்டை போன்ற ஆடைகளைத் தயாரிக்கிறது.
பாரம்பரியமிக்க கைத்தறி நெசவுக்குப் பெயர் பெற்ற இந்நகரத்தில் 1,000-க்கும் மேற்பட்ட நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. ஆனால், சமீபகாலமாக கைத்தறித் தொழில் நசிந்து வருவதால் 5,000 தறிகள் இருந்த இடத்தில் இப்போது 300 தறிகள்தான் இருக்கின்றன.
இந்நிலையில், இயற்கை நார் நெசவுக் குழுமம், பருத்தி நூல், பட்டு நூல்களுடன் வாழை நார் சேர்த்து காட்டன் சேலை, பட்டுச் சேலை நெசவு செய்கிறது.
தனி பருத்தி நூலில் செய்யப்படும் சேலையைவிட, பருத்தி நூலுடன் வாழை நார் சேர்த்து தயாரிக்கப்படும் சேலை உடலுக்கு அதிக குளிர்ச்சி தருவதாக அதைப் பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.
இங்கே பணியாற்றுபவர்களில் 90% பேர், 'அன்னிபெசன்ட்' மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள். சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் பொருட்களைத் தயாரிப்பததையும் அதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பதையும் நோக்கமாகக்கொண்ட இந்த குழுமம், லிம்கா சாதனை விருது, பரிவர்த்தன் விருது, ஜெனிவா அனைத்துலக விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளது.
கற்றாழை நார்- பச்சையாக இருக்கும் நார்களை எளிமையான பிளீச்சிங் மூலம் சுத்தம் செய்து அதிலிருக்கும் கொழுப்புகளை அகற்றுகிறார்கள். பின் மென்மையான முறையில் ஒற்றை நார்களாக பிரித்தெடுத்து துணி தயாரிக்கப்படுகிறது.
சோற்றுக்கற்றாழை நாரில் நெய்யப்படும் உடைகள், தோல் நோய்களையே குணப்படுத்தும்.
சணல் நார் - காய்கறிச் செடிகளின் தோல்களிலிருந்து தயாரிக்கப்படும் தங்கநிற நார்களாலும் மறுசுழற்சி செய்யக்கூடிய சணலினாலும் மிகவும் நேர்த்தியாகத் தயாரிக்கப்படுகிறது ஜூட் துணி.
மூங்கில் நார் - மூங்கிலின் உட்புறமிருக்கும் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நார்களால் ஆன துணிகள் ஈரப்பதத்தை விரைவில் உறிஞ்சி, வெப்பத்தைத் தணிக்கக்கூடியவை. கோடைக் காலத்தில் குளிர்ச்சி தரக்கூடிய மூங்கில் இழைகளால் ஆன துணி பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலையும் கொண்டவை.
வாழை நார் - செவ்வாழை, நேந்திரம், பூவன் வாழை மரங்களின் பட்டைகளை உரித்து அதிலிருந்து நாரெடுக்கப்படுகிறது. உலர விட்டு, தனித்தனி இழைகளாக எடுத்து துணி நெய்யப்படுகிறது.
செயற்கை இழைகளின் மிக முக்கியமான குழுக்கள் பாலிமைடுகள், பாலியஸ்டர், பாலிஅக்ரிலிக்ஸ், குளோரைடு இழைகள் ஆகும்.
இவை பொதுவாக எடை குறைவானவையாக, எளிதில் கிழிந்து விடாத வலிமை கொண்டதாக இருக்கும். ஆர்ட் சில்க், பாலியஸ்டர் துணிகள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. இவை ஈரப்பதத்தை உறிஞ்சாது. அதனால் இவற்றைத் துவைப்பதும் காயவைப்பதும் எளிது.
அதேநேரத்தில், காற்றோட்டம் இல்லாததால் உடலை வெப்பமாக்கும், அணிய வசதியாக இருக்காது. சிலருக்கு இத்தகைய செயற்கை இழைத் துணிகளால் தோல் எரிச்சல், சளி, அரிப்பு போன்ற சில ஒவ்வாமைகள் ஏற்படும்.
எனவே, உடைகள், மெத்தை, தலையணை உறை, துண்டுகள், திரைச் சீலை என எதை வாங்கினாலும் அத்துணி எதனால் ஆனது என்பதைத் தெரிந்துகொண்டு வாங்குவது உடலுக்கும் உலகுக்கும் நன்மை பயக்கும்.

