கொவிட்-19 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ஆஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் நோய் எதிர்ப்பு மருந்தை கொள்முதல் செய்ய சுகாதார அமைச்சு அந்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இருந்தாலும் அந்தப் பேச்சுவார்த்தை பற்றிய மேல் விவரங்களை இப்போதைக்குத் தன்னால் வெளியிட இயலவில்லை என்று அமைச்சு கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
ஆஸ்ட்ராஸெனகா நிறுவனம் தனது AZD7442 மருந்து பற்றிய பரிசோதனை முடிவுகளை வியாழக்கிழமை வெளியிட்டது.
நோயாளியிடம் கடுமையான பாதிப்பு அல்லது மரணம் ஏற்படுவதற்கான ஆபத்துகளை அந்த மருந்து 88 விழுக்காடு குறைக்கிறது என்று அந்தப் பரிசோதனை முடிவுகள் மூலம் தெரியவந்தன.
நோய் அறிகுறி தெரியவந்த பிறகு மூன்று நாட்களுக்கு அந்த மருந்தை நோயாளிகளின் உடலில் செலுத்தினால் இத்தகைய பாதுகாப்பு கிடைக்கிறது என்று அந்த நிறுவனம் அறிவித்தது.
அந்த மருந்தில் இரண்டு நோய் எதிர்ப்பு புரதங்கள் இருக்கின்றன. அவை நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் வெள்ளை அணுக்களில் இருந்து பெறப்படுகின்றன.
அந்த அணுக்கள் குணமடைந்து வரும் கொவிட்-19 நோயாளிகளிடம் இருந்து பெறப்படும். ஆஸ்ட்ராஸெனகா மருந்தை சிகிச்சைக்குப் பயன்படுத்தினால் ஓராண்டு காலத்திற்கு நீடிக்கும் பாதுகாப்பு உடலில் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முன்தடுப்பு நடவடிக்கையாக அதைப் பயன்படுத்தினால் ஆறு மாதத்திற்குப் பாதுகாப்பு கிடைக்கும். லேசானது முதல் மிதமான கொவிட்-19 தொற்று இருந்த நோயாளிகளிடம் அந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த நோயாளிகளில் ஏறத்தாழ 90 விழுக்காட்டினருக்குப் புற்றுநோய் அல்லது நீரிழிவு போன்ற பாதிப்புகள் இருந்தன. 13 நாடுகளைச் சேர்ந்த 900 பேரை உள்ளடக்கி 'டேக்கல்' என்ற அந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆஸ்ட்ராஸெனகா நிறுவனத்தின் கொவிட்-19 தடுப்பூசி உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த நிறுவனம் தனது AZD7442 மருந்தை கடும் பாதிப்பு களை முன்னதாகவே தவிர்த்துக்கொள்வதற்கான மருந்தாக பயன்படுத்த அனுமதிக்குமாறு கேட்டு அமெரிக்க உணவு, மருந்து நிர்வாகத் துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

