புதுடெல்லி: இலங்கையின் பொருளியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நான்கு அம்ச திட்டம் ஒன்றை அமலாக்க இந்தியாவும் இலங்கையும் ஒப்புக்கொண்டன.
இலங்கையின் நிதி அமைச்சர் பாசில் ராஜபக்சே அண்மையில் இரு நாள் பயணம் மேற்கொண்டு புதுடெல்லி வந்திருந்தார். அப்போது இந்த இணக்கம் ஏற்பட்டது.
உணவு, மருந்து, எரிபொருள் வாங்குவதற்கு இந்தியா இலங்கைக்கு கடன் வழங்குவது; இலங்கையின் வர்த்தகப் பற்றாக்குறையைச் சமாளிக்க நாணய மாற்று உடன்பாடு, திரிகோணமலை எண்ணெய் நிறுவனங்களை நவீனமயப் படுத்தும் திட்டத்தை முன்னதாகவே நிறைவேற்றுவது; இலங்கையில் பல்வேறு துறைகளில் இந்திய முதலீடு இடம்பெற கொழும்பு வழிவகைகளைச் செய்து கொடுப்பது ஆகிய நான்கும் அந்தத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இரு தரப்பும் ஏற்றுக்கொள்கின்ற குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற இணக்கமும் ஏற்பட்டு உள்ளதாக இந்தியாவில் இருக்கும் இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் இலங்கை அமைச்சர் புதுடெல்லி யில் சந்தித்தார்.
இந்திய அறநிறுவனம் என்ற அமைப்பின் ஏற்பாட்டில் அபுதாபியில் இந்தியப் பெருங்கடல் வட்டார மாநாடு என்ற ஒரு கூட்டம் இன்று தொடங்குகிறது. அதை இந்திய அமைச்சர் ஜெய்சங்கரும் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவும் தொடங்கிவைப்பர்.

