பிரிஸ்பன்: கிரிக்கெட்டில் இப்பருவத்தின் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்தை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் விழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. மூன்றாம் நாள் ஆட்டத்தில் மீண்டுவரும் அறிகுறிகளைக் காட்டிய இங்கிலாந்து, நான்காம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸில் 77 ஓட்டங்களில் கடைசி எட்டு விக்கெட்டுகளை இழந்தது.
இங்கிலாந்தின் அணித் தலைவர் ஜோ ரூட், வெளியேற்றப்பட்டபோது 89 ஓட்டங்களை எடுத்திருந்தார், டேவிட் மலான், 82 ஓட்டங்களை எடுத்த பிறகு வெளியேற்றப்பட்டார். 297 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களை இங்கிலாந்து எடுத்தது.
இதனால் தனது முதல் இன்னிங்ஸில் 425 ஓட்டங்களை எடுத்திருந்த ஆஸ்திரேலியாவிற்கு ஆட்டத்தை வெல்ல 21 ஓட்டங்கள் மட்டுமே தேவைப்பட்டன. மதிய உணவு ஓய்வுக்குப் பிறகு இலக்கை எளிதில் அடைந்தது ஆஸ்திரேலியா.
ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் ஆடிய 11 டெஸ்ட் ஆட்டங்களில் 10ல் தோல்வியடைந்தது இங்கிலாந்து. ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் வெல்ல இங்கிலாந்து இத்தொடரை வெல்லவேண்டும், எஞ்சியுள்ள நான்கு ஆட்டங்களில் கவனமாக இருக்கவேண்டும்.
இவ்வாட்டத்தில் ஆஸ்திரேலியாவின் புதிய அணித் தலைவரான பேட் கம்மின்ஸ் ஏழு விக்கெட்டுகளை வெளியேற்றி அசத்தினார். நான்கு விக்கெட்டுகளை வெளியேற்றினார் நேத்தன் லியோன்.

