சிங்கப்பூர்: சிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா பதவி விலகியுள்ளார்.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கத்துடன் அவர் செய்துகொண்ட ஒப்பந்தம் இன்னும் முடியாத நிலையில் அவர் விடைபெற்றுகொண்டார்.
அவரது ஒப்பந்தம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவடைகிறது.
அண்மையில், சுசுகி கிண்ண காற்பந்துப் போட்டியில் அபாரத் திறனையும் விட்டுக்கொடுக்காமல் போராடும் உணர்வையும் வெளிப்படுத்திய சிங்கப்பூர் குழுவின் முயற்சிகளை அங்கீகரித்துப் பாராட்டும் வகையில் நேற்று ஜாலான் புசார் விளையாட்டரங்கத்தில் விருந்துபசரிப்பு நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு பேசிய கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் யோஷிடாவின் பதவி விலகல் குறித்து அறிவித்தார்.
2012ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சிங்கப்பூர் குழு, சுசுகி கிண்ணப் போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் தோல்வியின் பிடியில் சிக்கி இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை அது இழந்தது. அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூரின் மூன்று ஆட்டக்காரர்களுக்குச் சிவப்பு அட்டை காட்டப்பட்டது. நடுவர் எடுத்த பல வியக்கத்தக்க முடிவுகளால் 4-2 எனும் கோல் கணக்கில் இந்தோனீசியாவிடம் சிங்கப்பூர் தோல்வி அடைந்தது.
இந்தத் தோல்விக்குப் பிறகு சொந்த நாடான ஜப்பானில் உள்ள பல குழுக்களும் ஆசிய நாடு ஒன்றும் தமக்குப் பயிற்றுவிப்பாளர் பதவி வழங்க தயாராக இருப்பதாக யோஷிடா தெரிவித்திருந்தார்.
47 வயது நிரம்பிய யோஷிடா, 2019ஆம் ஆண்டு மே மாதத்தில் சிங்கப்பூர் குழுவின் பயிற்றுவிப்பாளராகப் பதவி ஏற்றார்.
அவரது வழிகாட்டலின்கீழ் சிங்கப்பூர் குழு ஆறு வெற்றிகள், நான்கு சமநிலைகள், பத்து தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

