மெல்பர்ன்: ஆஷஸ் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை ஆஸ்திரேலிய அணி வீழ்த்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்
பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி யான 'பாக்சிங் டே' டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 185 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டு களையும் இழந்தது. ஜோ ரூட் 50 ஓட்டங்கள் எடுத்தார்.
ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், நேதன் லயன் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா, 267 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியைவிட 82 ஓட்டங்கள் எடுத்து ஆஸ்திரேலியா முன்னிலை வகித்தது. தொடக்க வீரர் ஹாரிஸ் பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து 76 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இங்கிலாந்தின் ஆண்டர்சன் நான்கு விக்கெட்டுகளும், ராபின்சன், மார்க் வுட் தலா 2 விக்கெட்டு களும், ஸ்டோக்ஸ், ஜேக் லீச் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.
இதையடுத்து, 82 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்தது. ஆஸ்திரேலிய அணியினரின் பந்துவீச்சில் இங்கிலாந்து திக்குமுக்காடியது.
இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து நான்கு விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சக்கைபோடு போட்டனர்.
இதனால் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து மளமளவென சரிந்தன.
இறுதியில், இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்சில் 68 ஓட்டங்கள் எடுத்து சுருண்டது. ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் மட்டுமே இரட்டை இலக்கை எட்டினர். மற்றவர்கள் ஒற்றை இலக்கில் நடையைக் கட்டினர்.
இதன்மூலம் ஆஸ்திரேலியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், ஆஷஸ் தொடரை 3-0 என கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலண்ட் நான்கு ஓவர்கள் வீசி, வெறும் ஏழு ஓட்டங்கள் கொடுத்து, ஆறு விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

