இபிஎல் காற்பந்து: எட்டுப் புள்ளிகள் முன்னிலையுடன் முதலிடத்தில் மான்செஸ்டர் சிட்டி
லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள செல்சி குழுவைவிட எட்டுப் புள்ளிகள் கூடுதலாகப் பெற்று முதலிடத்தை வலுவாக்கிக்கொண்டுள்ளது மான்செஸ்டர் சிட்டி குழு.
பிரன்ட்ஃபர்ட் குழுவுடன் நேற்று அதிகாலை மோதிய ஆட்டத்தின் முற்பாதியில் ஃபில் ஃபோடன் கோலடிக்க, 1-0 என்ற கணக்கில் சிட்டி வெற்றிபெற்றது.
முன்னதாக செல்சி-பிரைட்டன் குழுக்கள் மோதிய ஆட்டம் 1-1 எனச் சமநிலையில் முடிந்ததும் லெஸ்டர் குழுவிடம் 1-0 என லிவர்பூல் தோற்றுப்போனதும் சிட்டிக்குச் சாதகமாக அமைந்தன.
இருப்பினும், பட்டத்திற்கான போட்டி இன்னும் முடியவில்லை என்கிறார் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் கார்டியோலா.
"இன்னும் 54 புள்ளிகளுக்கு விளையாட வேண்டியுள்ளது," என்று அவர் சுட்டினார்.
"பட்டம் சிட்டியின் கைசேர்வது உறுதி என்று சொல்வதைக் கேட்க நன்றாகவே உள்ளது. ஆனால், செல்சியும் லிவர்பூலும் அற்புதமாக விளையாடி வருகின்றன. புள்ளி வித்தியாசம் அதிகமாக இருப்பதற்கு அந்தக் குழுக்கள் தோற்றது காரணமல்ல. தொடர்ச்சியாக நாங்கள் பத்து ஆட்டங்களில் வென்று இருப்பதே காரணம்," என்றார் கார்டியோலா.
முட்டாள்தனம்: செல்சி நிர்வாகி
இதனிடையே, சாம்பியன்ஸ் லீக் நடப்பு வெற்றியாளரான செல்சி, இப்பருவத்திற்கான இபிஎல் பட்டப் போட்டியில் இன்னும் இருப்பதாகத் தாம் நினைத்தால் அது முட்டாள்தனமானது என்று அக்குழுவின் நிர்வாகி தாமஸ் டகல் கூறியிருக்கிறார்.
பிரைட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி நேரத்தில் கோலை விட்டுக்கொடுத்ததால் செல்சி வெற்றியைப் பறிகொடுத்து, இரண்டு புள்ளிகளை இழந்தது.
"செல்சி ஆட்டக்காரர்கள் எழுவர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து, ஆறு வீரர்கள் ஆறு வாரங்களுக்கும் மேலாக விளையாட முடியவில்லை. இத்தகைய சூழலில், எங்களால் எப்படிப் பட்டத்திற்குப் போட்டி போட முடியும்," என்று சொல்லி டகல் ஆதங்கப்பட்டார்.

