செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்கா சென்றுள்ள விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கி இருக்கிறது.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
செஞ்சுரியன் அரங்கில் இந்திய அணி வெற்றிபெற்றது இதுவே முதன்முறை. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் முக்கியக் காரணமாக அமைந்தனர்.
போட்டியின் முதல் இன்னிங்சில் லோகேஷ் ராகுல் 123 ஓட்டங்களை விளாச, இந்திய அணி 324 ஓட்டங்களை எடுத்தது. அதன்பின் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
இந்திய அணித் தரப்பில் வேகப் பந்துவீச்சாளர் முகம்மது ஷமி ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதனுடன், டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தியோர் பட்டியலிலும் அவர் இணைந்தார்.
127 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி 174 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
இதனைத் தொடர்ந்து, 305 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 94 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இந்நிலையில், போட்டியின் கடைசி நாளான நேற்று அவ்வணி 97 ஓட்டங்களைச் சேர்த்து, எஞ்சி இருந்த ஆறு விக்கெட்டுகளையும் பறிகொடுத்துத் தோற்றுப்போனது.
பும்ரா, ஷமி ஆளுக்கு மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ், அஸ்வின் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி ஜோகனஸ்பர்க்கில் தொடங்குகிறது.

