மகிழ்ச்சியை அதிகரித்துக் குதூகலமாக்கும் விளையாட்டுகளுக்கு பொங்கல் தருணத்தில் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. பயிர் விளைச்சலைக் கொடுக்கும் கதிரவனுக்கும் மனிதனுக்கு உதவிகரமாக இருக்கும் மாடுகளுக்கும் இத்திருநாள் சமயத்தில் மனமார நன்றி கூறும் மக்கள், ஆங்காங்கே நம் பழந்தமிழரின் வீர விளையாட்டுகளுள் ஒன்றான மாட்டுவண்டிப் பந்தயங்களையும் நடத்தி பலதரப்பட்ட மக்களையும் பெரிதும் கவர்ந்து வருகின்றனர்.
ரேக்ளா வண்டிப் பந்தயம் (Rekla Race) என்பது திருவிழாக் காலங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் காளை மாட்டுவண்டிப் பந்தயமாகும்.
தமிழ்நாட்டின் அவனியாபுரம், விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், உடுமலைப்பேட்டை, நாகர்கோவில், பொள்ளாச்சி, பணகுடியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ரேக்ளா வண்டிப் பந்தயங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கோயம்புத்தூர், சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, கரூர் போன்ற இடங்களைச் சேர்ந்த மாட்டுவண்டிப் போட்டியாளர்கள் ஏராளமானோர் இப்போட்டிகளில் கலந்துகொண்டு, தமிழ்ச் சமூகத்தின் தொன்றுதொட்டு வரும் கலாசாரத்தை இன்றும் வளர்த்து வருகின்றனர்.
பெரும்பாலும், இவ்வகைப் பந்தயங்களில் காளை மாடுகள் ஈடுபடுத்தப்படுகின்றன.
ஒருசில இடங்களில் எருமைக் கிடாவையும் குதிரையையும் இப்பந்தயங்களில் ஈடுபடுத்துவதாக தகவல்.
ரேக்ளா என்பது ஒருவர் மட்டும் அமரக்கூடிய ஒரு சிறிய வகை மாட்டு வண்டியாகும். இதன் சக்கரங்கள் சிறிய அளவிலும் வேகமாக சுழலக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
நாட்டு மாடு காளைகளைப் பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு மட்டுமின்றி, ரேக்ளா பந்தயத்துக்கும் பயன்படுத்தி வருகிறார்கள்.
இதுபோன்ற போட்டியை நிறைய திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
இந்தப் போட்டியை நடத்துவதற்காக காளைகளுக்கு பிரத்தியேக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இரண்டு காளைகளும் ஒரே வேகம், ஒரே உயரம் கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் அப்படி ஒத்து இருந்தால்தான் இந்தப் போட்டியில் வெற்றிபெற முடியும் என்றும் போட்டியாளர்கள் கூறுகின்றனர்.
இப்போட்டிகள் மிக அதிக அளவில் மாட்டுப் பொங்கலன்று நடைபெறுகின்றன.
குறைந்த நேரத்தில் இலக்கை அடையும் வண்டிகளுக்கும் வெற்றிபெற்ற வண்டி உரிமையாளர்களுக் கும் மாடுகளுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
மாட்டின் கொம்புகளில் வெற்றி சால்வைகள் சுற்றப்பட்டு, மாலைகள் அணிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காளைகள் கௌரவிக்கப்படுகின்றன.
வண்டி உரிமையாளரின் வெற்றியை ஊரார் அனைவருமே தங்களது வெற்றியாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களுள் ஒன்றான மாட்டுவண்டியின் பயன்பாடு அண்மைகாலமாக குறைந்துவிட்ட போதிலும் தென்மாவட்டங்களிலும் கொங்கு நாட்டிலும் இந்த வகைப் பந்தயங்கள் மக்களின் வரவேற்பை அதிகமாகவே பெற்று வருகின்றன.
பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் வயது, அவற்றின் உயரத்தின் அடிப்படையில் பெரியவை, நடுத்தரம், கரிச்சான், பூஞ்சிட்டு என மாடுகள் தரம்பிரிக்கப்பட்டு, போட்டிக்கான தூரம் தீர்மானிக்கப் படுகிறது.
பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டியைத் தவிர மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல், ரேக்ளா பந்தயமும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
பெரிய மாடு என்றால் பத்து மைல் தூரம், நடு மாடு என்றால் எட்டு மைல், அடுத்தடுத்த வகைகள் ஆறு மைல், ஐந்து மைல் தூரம் எனப் போக வர சேர்த்து கணக்கிட்டு மாடுகளைப் பிரித்து பந்தயத்தை ஏற்பாடு செய்கின்றனர்.
சிவகங்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரம் வண்டிகளில் மாடுகள் பந்தயத்திற்கு வருவ தாகவும் மாடுகளுடன் சேவல், ஆடுகளை வைத்தும் போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
ெகாரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்தக் கொண்டாட்டங்ள் சூடுபிடிக்காமல் களையிழந்து உள்ளதாகவும் தகவல்கள் ெதரிவித்துள்ளன.

