மெல்பர்ன்: தமது விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்ததை எதிர்த்து உலகின் முதல்நிலை டென்னிஸ் ஆட்டக்காரர் நோவாக் ஜோக்கோவிச், 34 (படம்), தொடுத்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், கொவிட்-19 தடுப்பூசி நிலை தொடர்பிலான அவரது 11 நாள் போராட்டம் முடிவிற்கு வந்தது. அத்துடன், அவரது 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டக் கனவும் கலைந்துபோனது.
தீர்ப்பால் பெரும் ஏமாற்றமடைந்ததாகக் கூறினார் ஜோக்கோவிச்.
நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, இன்னும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத செர்பியாவின் ஜோக்கோவிச் ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று மாலை துபாய் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, தடுப்பூசி போடாதோருக்கு ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் பங்கேற்க அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், மருத்துவக் காரணங்களுக்காக ஜோக்கோவிச்சிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு, அவர் ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டிகளில் விளையாட அனுமதி வழங்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

