கடந்த ஈராண்டுகளாகத் தொடரும் கொவிட்-19 சூழலால் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மன அழுத்தம் குறைந்து மனம் தெளிவடைந்து சரியான முடிவுகளை எடுக்க சில வழிமுறைகளை 'த நியூயார்க் டைம்ஸ்' ஊடகம் பட்டியலிட்டுள்ளது.
அன்றாட வேலைகளில் ஆசை
உங்கள் அன்றாட வேலைகளை தினமும் ஒரு அர்த்தத்துடன் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை போக்கிக்கொள்ளலாம். இதற்கு ஒரு எளிய வழிமுறையாக, சமையலறையை சுத்தம் செய்வது, வரவேற்பு அறையை அழகுபடுத்துவது, தலையணை உறைகளைத் துவைத்து பயன்படுத்துவது போன்ற பிடித்த செயல்களில் ஈடுபடலாம். இதனால், ஒரு திருப்தியான மனநிலை ஏற்படும். 10 நிமிட நேர சிறிய நடைபயிற்சிக்குச் செல்வதும் நல்ல பலனைத் தரும்.
எந்த இடத்திலும் தியானம்
"உங்கள் மூளை ஒரு கணினியைப் போன்றது. அது, ஒரு குறிப்பிட்ட அளவு நினைவாற்றலை மட்டுமே கொண்டுள்ளது," என்று கூறுகிறார் பிரவுன் பல்கலைக்கழகத்தின் மைண்ட்ஃபுல்னஸ் மையத்தின் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளின் இயக்குநர் டாக்டர் ஜட்சன் ப்ரூவர். "மனதை அமைதிப்படுத்துவதற்கு தியானம் செய்வது முக்கியம். இதை எந்த இடத்திலும் பழகலாம்," என்றும் அவர் கூறுகிறார்.
ஓய்வு முக்கியம்
உங்கள் மூளைக்கும் உடலுக்கும் ஓய்வு தேவைப்பட்டால், வேலை அல்லது பள்ளியிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு ஓய்வு எடுப்பது முக்கியம்.
எழுதி, கசக்கி வீசுங்கள்
நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சினை மனநலப் பாதிப்புகளை எற்படுத்தும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி, நினைவாற்றலை குறைக்கும். மனச்சோர்வையும் அதிகரிக்கும்.
உங்கள் மனதை தொந்தரவு செய்யும், தூக்கத்தைக் கெடுக்கும் உங்களின் அனைத்து எண்ணங்களையும் படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு தாளில் எழுதி, பின்னர் அதை கசக்கி வீசி விடுங்கள். இதுபோல் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் என்கிறார் தூக்கம் குறித்து ஆலோசனைகளை வழங்கும் மருத்துவர் ஓ'கானர்.
சிரித்து மகிழுங்கள்
உங்களுக்குப் பிடித்த நகைச்சுவைக் காணொளிகள், திரைப்படங்களைப் பார்ப்பது மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். மனம் இறுக்கமாகத் தோன்றும் நேரத்தில் நல்ல மென்மையான இசையைக் கேளுங்கள். இசை கேட்பதால் உங்கள் மன இறுக்கம் தளர்ந்து மனம் லேசாகும்.
ஆதாரம்: நியூயார்க் டைம்ஸ்

