பிரபலங்களின் வாரிசாக இருப்பதால் திரையுலகில் அறிமுகமாவது எளிதாக இருக்குமே தவிர, பெரிய வளர்ச்சியைக் கொடுத்துவிடாது என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன் (படம்).
வாரிசு என்ற தகுதி தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற்றுத் தராது என்றும் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தால் மட்டுமே திரையுலகில் நீடிக்க இயலும் என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலையாளத்தில் கல்யாணி நடித்துள்ள 'ஹிருதயம்' படத்துக்கு தென்னிந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது மலையாளம், தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன.
தமிழில் சிவகார்த்திகேயனுடன் 'ஹீரோ', சிம்புவுடன் 'மாநாடு' என பெரிய நாயகர்களுடன் இணைந்து நடித்திருந்தாலும் கல்யாணிக்கு சொல்லிக்கொள்ளும்படியான கதாபாத்திரங்கள் இன்னும் அமையவில்லை. ஆனால் அதுகுறித்து தாம் கவலைப்படவில்லை என்றும் எதற்காகவும் தாம் அவசரப்படவில்லை என்றும் பக்குவமாகப் பேசுகிறார்.
"இரண்டு பேருமே திறமையான, முன்னணியில் உள்ள நடிகர்கள். அவர்களுடன் நான் நடித்த படங்கள், நாயகனை மையமாக வைத்து உருவானவை. எனினும் அந்த இரண்டு படங்களின் கதையைக் கேட்டதும் இந்தப் படங்களில் நான் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதைச் செயல்படுத்தி உள்ளேன்.
"இன்று தமிழ் ரசிகர்களுக்கு என்னைத் தெரிகிறது என்றால், அதற்கு சிவாவும் சிம்புவும்தான் காரணம்," என்கிறார் கல்யாணி.
இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியரின் மகள் என்பதால் மலையாள திரையுலகில் கல்யாணி எப்போதுமே செல்லப் பிள்ளைதான். அங்கு அவருக்கான வாய்ப்புகளும் அதிகம் கிடைத்து வருகின்றன. எனினும் தமிழ், தெலுங்கிலும் சாதிக்க விரும்புகிறாராம்.
"மலையாள திரையுலகைப் பொறுத்தவரை திறமை உள்ளதா, கதாபாத்திரத்துக்குப் பொருத்தமாக இருப்பாரா என்பதற்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். சிபாரிசுகள், பெற்றோருக்கு உள்ள செல்வாக்கு ஆகியவற்றை எல்லாம் கண்டுகொள்வதே இல்லை.
"அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அங்கு நண்பர்கள் அதிகம் என்பது உண்மைதான். அதன் காரணமாக இருவரையும் நன்கு அறிந்த மூத்த நடிகர்களுடன் நடிக்கும்போது என்னிடம் கூடுதலாக அன்பு பாராட்டுவார்கள். நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள்.
"இந்தப் பாசமும் பாதுகாப்பும் முதல் தலைமுறை நடிகர்களுக்கு கிடைக்காது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். மற்றபடி, திறமை இருந்தால்தான் திரையுலகில் சாதிக்க முடியும். எல்லா மொழியிலும் இதுதான் நிலைமை," என்று சொல்லும் கல்யாணி, உடற்பயிற்சிதான் தனது கட்டுடலுக்குக் காரணம் என்கிறார்.
சினிமாவில் நடிக்கும் முன்பு இவரும் உடல் பெருத்துத்தான் இருந்தாராம். ஆனால் நடிகையாகலாம் என்று முடிவு செய்ததும், இனிப்புகள் சாப்பிடுவது, ஐஸ்கிரீம் சுவைப்பது உள்ளிட்ட பல விஷயங்களை தியாகம் செய்துள்ளார். அதன் பலனாக ஒரே ஆண்டில் ஏழெட்டு கிலோ எடை குறைந்து இப்போது 49 கிலோ மட்டுமே உள்ளார்.
"வாரிசு நடிகை என்று முத்திரை குத்தப்படுவது குறித்து நான் கவலைப்பட்டது கிடையாது. அதேசமயம் ரசிகர்கள் என்னைப் பற்றிய சில உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
"பள்ளிப்படிப்பை முடித்தபிறகு அப்பாவின் படங்களிலும் சில இந்திப் படங்களிலும், தமிழில் 'இருமுகன்' படத்திலும் தயாரிப்புத் துறையில் வேலை பார்த்த அனுபவம் உண்டு. மேலும் சில படங்களில் கலைத்துறை உதவியாளராகவும் பணியாற்றி உள்ளேன். இப்படிச் சொந்த முயற்சியில் சில அனுபவங்களைப் பெற்ற பிறகே நடிகை ஆனேன்," என்கிறார் கல்யாணி பிரியதர்ஷன்.

