தமிழக நலனுக்காக 14 கோரிக்கைகளுடன் மனு அளித்தார்
புதுடெல்லி: நான்கு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழகம், தமிழர்கள் தொடர்பாக 14 முக்கியக் கோரிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் பிரதமரிடம் முன்வைத்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
பிரதமருடனான சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள், தமிழக மக்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார் முதல்வர்.
காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டும் கர்நாடக அரசு திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி உள்ள முதல்வர் ஸ்டாலின், பாக் வளைகுடாவில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளையும் மீனவர்களின் பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், கச்சத்தீவை மீட்பது தொடர்பான கோரிக்கையும் அவரது மனுவில் இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக அல்லலுறும் இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசின் சார்பில் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களுக்கு சம உரிமை, அரசியல் உரிமைகளைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், தமிழகத்துக்குத் தர வேண்டிய நிதி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாகத் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், மழை, வெள்ளம், மாநில அரசின் திட்டங்களுக்கான நிதியையும் தாமதம் இல்லாமல் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
உக்ரேனில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் படிப்பு தடைபட்ட நிலையிலிருந்து இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பைத் தொடர்வதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என்பதும் முதல்வரின் கோரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை -2020 என்பது மாநில சுயாட்சிக்கே எதிரானது என்றும் அதில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்களும் தமிழக மாணவர்கள் நலனுக்கு எதிரானது என்பதால், அந்தக் கொள்கை விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
நீட் தேர்வால் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவது குறித்தும் முதல்வர் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அவர் சந்தித்தார். முதல்வர் வேறு சில கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் இது தேசிய அரசியலில் தமிழக முதல்வருக்கு உள்ள முக்கியத்துவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பேட்டி
பிரதமருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தாம் முன்வைத்த கோரிக்கைகளை பிரதமர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டதாகக் குறிப்பிட்டார். இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, மருந்து வழங்க அனுமதி கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

