புதுடெல்லி: உக்ரேன் மீது ரஷ்ய துருப்புகள் தொடர் தாக்குதலில் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் புதுடெல்லிக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்வது உலக நாடுகளின் கவனத்தை இந்தியா மீது திருப்பியுள்ளது.
இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், தமது பயணத்தின்போது பல்வேறு உலக விவகாரங்கள் குறித்து இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவார் எனத் தெரிகிறது.
உக்ரேன் மீதான தாக்குதலுக்காக ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவிக்காத நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் கருதப்படுகிறது.
இதற்கிடையே, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் புதன்கிழமை இரவு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனுடன் தொலைபேசி வழி உரையாடிய தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. இருவரும் இந்தோ-பசிபிக் வட்டார நிலைமை குறித்தும் உக்ரேன் நெருக்கடி பற்றியும் விவாதித்ததாகத் தெரிகிறது. இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் ஜெய்சங்கர், இந்த உரையாடல் பயனுள்ளதாக அமைந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.
"இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தோம். இந்தோ-பசிபிக், உக்ரேன், உலகப் பொருளியல் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது," என்று ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

