ஹனோய்: தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை வெண்கலம் வென்று ஆறுதலடைந்த நிலையில், எட்டாக்கனியாக விளங்கிய தங்கப் பதக்கத்தை இம்முறை கெட்டியாகப் பற்றிக்கொண்டார் சீலாட் தற்காப்பு விளையாட்டாளரான சிங்கப்பூரின் நூருல் சுகாய்லா.
பெண்களுக்கான 'கிளாஸ் இ' 65-70 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியில் நூருல் 30-22 என்ற புள்ளிக் கணக்கில் மலேசியாவின் சித்தி ஷாஸ்வானாவை நேற்று தோற்கடித்தார்.
தளரா முயற்சிக்குப்பின் தங்கம் கைசேர்ந்த மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீர் வடித்த நூருல், "என்னால் சாதிக்க முடியுமா எனப் பல ஆண்டுகளாக என்மீது நானே ஐயம் கொண்டிருந்தேன்.
"சீலாட்டிற்காகக் குடும்பத்தைப் பிரிந்து அதிக நேரம் செலவிட்டேன். அதனால் இம்முறை என் பெற்றோருக்குப் பெருமை தேடித் தரவும் பிரிந்திருந்த அந்த நேரம் மதிப்புக்குரியது என்பதை அவர்களுக்கு உணர்த்தவும் விரும்பினேன்," என்றார் 27 வயதான நூருல்.
ஆடவருக்கான 'கிளாஸ் சி' பிரிவில் சிங்கப்பூரின் ஹஸிம் யுஸ்லி தங்கப் பதக்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் இந்தோனீசியாவின் யாசர் அராஃபாவுடன் மோதினார் யுஸ்லி. போட்டி முடிய 28 நொடிகளே இருந்தபோது 21-21 என்ற சமநிலை காணப்பட்டது. அப்போது, விதிமுறைகளுக்குப் புறம்பான வகையில் உதைத்ததால் இந்தோனீசிய வீரர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
'கிளாஸ் எஃப்' பிரிவில் அப்துல் ரசாக் அப்துல் ரஷீத் வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதிப் போட்டியில் அவர் வியட்னாமின் டான் தின் நாமிடம் 42-14 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றுப்போனார்.
பிரதமர் லீ சியன் லூங் பாராட்டு
தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பதக்கம் வென்று, பல சாதனைகளைத் தகர்த்துவரும் சிங்கப்பூர் போட்டியாளர்களுக்குப் பிரதமர் லீ சியன் லூங் பாராட்டு தெரிவித்து உள்ளார். "ஹனோயில் நமது விளையாட்டாளர்கள் மின்னிவருவது மகிழ்ச்சி தருகிறது. தென்கிழக்கு ஆசிய அளவிலும் தேசிய அளவிலும் தனிப்பட்ட வகையிலும் நம் போட்டியாளர்கள் சாதனைகள் பல படைத்துள்ளனர். நீச்சலில் குவா சகோதர, சகோதரிகள் நான்கு தங்கப் பதக்கங்களை வென்று தந்துள்ளனர். தொடர்ந்து முயலுங்கள், இறுதிவரை போராடுங்கள்! சிங்கப்பூரே உங்கள் பின்னால் நிற்கிறது," என்று பிரதமர் லீ தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்
துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் முதல் நாளான நேற்று சிங்கப்பூர் குழு தடுமாறியது. பத்து மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் மகளிர் குழு வெண்கலம் வென்றது ஆறுதலாக அமைந்தது.
கட்டழகு வீரர்கள் தகுதிநீக்கம்
ஊக்கமருந்துத் தடுப்பு விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, தகுதிநீக்கம் செய்யப் பட்டதால் பிலிப்பீன்ஸ் கட்டழகுப் போட்டியாளர்கள் மனமுடைந்துபோயினர். மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே அவர்கள் ஊக்கமருந்துச் சோதனைகளைச் செய்ததற்கான ஆவணங்களை பிலிப்பீன்ஸ் வழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதனையடுத்து, பதக்கத்திற்காகப் போட்டியிட இருந்த நிலையில், ஆண்கள் எண்மரும் பெண் ஒருவரும் அடங்கிய பிலிப்பீன்ஸ் கட்டழகுக் குழு ஏமாற்றத்துடன் நாடு திரும்ப வேண்டியதாயிற்று.

