'லவ் டுடே' நாயகன், நாயகியை நேரில் காணலாம்
ஆடை ஆபரணம், அறைகலன், வீட்டு உபயோகப் பொருள்கள் என புத்தாண்டை வரவேற்கத்
தேவையான எல்லாப் பொருள் களையும் ஒருங்கே வழங்க இருக்கின்றது, ஷாபாஸ் நிறுவனத்தின் 'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சி. 2023 புத்தாண்டையும் பொங்கல் திருநாளையும் முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி 5ஆம் தேதியிலிருந்து 8ஆம் தேதி வரை சிங்கப்பூர் எக்ஸ்போ கண்காட்சி அரங்குகளில் ஒவ்வொரு நாளும் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும்.
ஹைதராபாத், புதுடெல்லி, ஜெய்ப்பூர் என பல இந்திய நகரங்களில் இயங்கிவரும் 100 வணிக நிறுவனங்களுடன் உள்ளூரில் செயல்படும் 50 நிறுவனங்
களையும் சேர்த்து மொத்தம் 150 நிறுவனங்கள் 'மெகா இந்தியா எக்ஸ்போ கண்காட்சி'யில் கலந்து கொண்டு தத்தம் பொருள்களையும் சேவைகளையும் அறிமுகப்
படுத்த இருக்கின்றன.
புது வரவுகள், வடிவமைப்புகள், சலுகைகள் என மக்களைக் கவரும் பல சிறப்பம்சங்களை மெகா இந்தியா எக்ஸ்போ கண்காட்சி ஒருங்கிணைக்கவுள்ளது.
அவற்றுடன், சொத்து நிறு வனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், கல்விசார் நிறுவனங்கள், நேரடி உணவு அங்காடிகள் ஆகியனவும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
நான்கு நாள்கள் தொடர்ந்து மக்களை மகிழ்விக்கும் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்ளது ஷாபாஸ்.
ஜனவரி 5ஆம் தேதி, பிரபல தமிழ்த் திரைப்படமான 'லவ் டுடே' யின் நாயகன் பிரதீப் ரங்கநாதன், நாயகி இவானா ஆகியோரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பை கண்காட்சிக்கு வருவோர் பெறலாம்.
தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில், உள்ளூர் கலைஞர்கள், பள்ளி மாணவர்கள் படைக்கும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவிருக்கின்றன.
மக்களை கூடுதலாக ஈடு
படுத்தும் வகையில், சிங்கப்பூர் இந்தியர்களை அங்கீகரிக்கும் விருது அங்கத்திற்கும் ஷாபாஸ் ஏற்பாடு செய்துள்ளது. 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஷாபாஸ் நிறுவனம் பலதரப்பட்ட மக்களுக்கும் பயன்படும் பல நிகழ்வுகளை முன்னெடுத்து நடத்தி வருகிறது.
தனது 22 ஆண்டுகால செயல்பாட்டில் முதல் முயற்சியாக அமைந்துள்ள இவ்வாண்டின் மெகா இந்தியா எக்ஸ்போ, இந்நிறுவனத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல் என்கிறார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி திரு அப்துல் மாலிக் அப்துல் சலாம், 42.
"உள்ளூர், வெளியூர் வணிக நிறுவனங்களுக்கு இடையே இணைப்பு ஏற்படவும் உள்ளூர் வணிகங்கள் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கும் நல்ல தளமாகவும் ஊக்கமாகவும் இந்தக் கண்காட்சி அமையும் என நம்புகிறோம். இதுபோன்ற பல கண்காட்சிகளை முன்னெடுத்து நடத்தியுள்ள ஷாபாஸ், இம்முறை ஓர் ஏற்பாட்டாளராக பரிமாணம் காண்கிறது. கண்காட்சியைக் காண வருவோர் தரமான சேவைகளையும் பொருள்களையும் எதிர்பார்க்கலாம். எங்களது படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கிறோம்," என்றார் திரு அப்துல் மாலிக்.
குறிப்பாக, சிங்கப்பூர் இந்தியர்களின் தேவைகளுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ற பொருள்களையும் சேவைகளையும் வழங்கும் இந்திய வணிக நிறுவனங்களை இக்கண்காட்சிக்காகத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
'மெகா இந்தியா எக்ஸ்போ' கண்காட்சியை வரும் ஆண்டுகளில் ஆண்டுதோறும் மூன்று முறை ஏற்பாடு செய்ய திட்டம் வைத்துள்ளது ஷாபாஸ் நிறுவனம். அதோடு, இவ்வாண்டு ஜூன் மாதத்திலும் தீபாவளி கொண்டாட்ட வேளையிலும் மெகா இந்தியா எக்ஸ்போவின் பதிப்புகள் இடம்பெறும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாகவும் திரு அப்துல் மாலிக் குறிப்பிட்டார். ஒவ்வொரு காண்காட்சிப் பதிப்பிலும் புதுப்புது வணிகங்கள், புதிய பொருள்கள், சேவைகள் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

