முக்கிய சாட்சிகள், போதுமான ஆதாரங்கள் என இரண்டுமே இல்லாத பட்சத்தில் கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரின் (ஓ&எம்) நிறுவனத்தின் முன்னாள் மூத்த நிர்வாகிகள் அறுவர் மீதும் ஊழல் தொடர்பில் வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக அவர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.
இருப்பினும் வலுவான, புதிய ஆதாரங்கள் கிடைத்தால் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் இம்முடிவை மறுமதிப்பீடு செய்யலாம், அவ்வாறு செய்ய முடியும் என்றார் அவர். இவ்விவகாரம் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட 17 கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
"சுருக்கமாகச் சொன்னால், ஆவண வடிவிலோ சாட்சிகள் மூலமோ போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தால்தான் சந்தேகத்திற்கு இடமின்றி ஒருவருக்கு எதிராக குற்றச்சாட்டைக் கொண்டுவர முடியும்," என்றார்.
லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கடந்த மாதம் வெளியிட்ட ஊடக அறிக்கையைச் சுட்டிய அவர், அதிகாரிகள் தங்களால் இயன்ற அளவுக்கு ஆதாரம் திரட்ட முயன்றதாகக் குறிப்பிட்டார். இதற்காக அனைத்துலகப் பங்காளிகளுடன் அவர்கள் இணைந்து செயல்பட்டனர்.
இருப்பினும் முக்கிய சாட்சிகள் பலரும் சிங்கப்பூரில் இல்லை என்றும் அவர்களின் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தி சிங்கப்பூரில் சாட்சியம் அளிக்க வைக்கச் சிரமமாக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
சாட்சி ஒருவர் வலுவான ஆதாரம் அளிப்பவராக இருந்தும் அவர் சிங்கப்பூர் வந்து சாட்சியம் அளிக்கத் தயாராக இல்லை என்றார் திருவாட்டி இந்திராணி.
இதில் சம்பந்தப்பட்ட அறுவரும் பிரேசிலில் தங்கள் நிறுவனச் செயல்பாடுகள் தொடர்பில் வெளிநாட்டு ஆலோசகர்களுக்குக் கையூட்டு தருவதற்கு கூட்டுச் சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படுகிறது.
பிரேசிலுக்குச் சொந்தமான 'பெட்ரோபிராஸ்' நிறுவனத்துக்குக் கிட்டத்தட்ட $73 மில்லியனை லஞ்சமாகத் தந்து அதற்கு ஈடாகத் தங்கள் நிறுவனத்துக்குச் சில வர்த்தக ஒப்பந்தங்களைப் பெற அவர்கள் செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

