பராமரிக்கப்படாத வீடு, அழுக்குப் படிந்த சுவர்கள், எங்கும் குப்பை, எதிலும் கரப்பான் தொல்லை. இப்படிப்பட்ட ஒரு வீட்டைக் கடந்து செல்லக்கூட நாம் தயங்குவோம். ஆனால், இளையர்கள் சிலர் மூத்தோருக்கு உதவும் ஒரே குறிக்கோளுடன் இத்தகைய வீடுகளுக்குள் தயங்காமல் காலடி எடுத்து வைத்து வீட்டுப் பராமரிப்புக்குக் கைகொடுத்து வருகின்றனர்.
'புரோஜெக்ட் அமிகா' எனும் தொண்டூழிய அமைப்பை சுஜேஷ் வீரமணி, 17, தன் பள்ளி நண்பர் ஜானத்தன் இயோவுடன் இணைந்து நிறுவினார்.
யூஹுவா வட்டாரத்தில் தன் பெற்றோருடனும் பாட்டியுடனும் வசித்துவரும் அவர், அவ்வப்போது பாட்டியின் மூத்த தோழிக்கு உணவு கொடுப்பதற்காக அவரின் வீடு தேடிச் செல்வதுண்டு. மூதாட்டி தனியே வாழ்ந்துவந்த அந்த ஓரறை வீடு இருந்த நிலைமையைப் பார்த்தார் சுஜேஷ். அந்த முதியவர் நடமாடச் சிரமப்படுவதால் வீட்டைப் பராமரிக்க முடியாமல் போனதை அவர் அறிந்துகொண்டார்.
அதில் தொடங்கிய சுஜேஷின் தொண்டூழிய எண்ணம், தற்போது 250க்கும் மேற்பட்ட மாணவத் தொண்டூழியர்களை ஈர்த்துள்ளது.
மாதத்தில் நான்கு முறையாவது மூத்தோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அங்கு துப்புரவு, பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவது அமைப்பின் சேவைகளில் அடங்கும். 2021ஆம் ஆண்டு அமைப்பு தொடங்கப்பட்டது முதல் இக்குழு ஏறக்குறைய 35 வீடுகளைப் பராமரித்து வந்துள்ளது. மூத்தோரை சுற்றுலாப் பயணங்கள் அழைத்துச் செல்வது முதலிய நிகழ்வுகளுக்கும் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
மூத்தோர் தங்களின் வயது, உடல்நிலை காரணமாக வீடுகளைச் சிறந்த முறையில் பராமரிக்க முடியாமல் போகிறது.
எனவே, மூத்தோர் வீடுகளுக்குப் புது பொலிவூட்டி அதன்வழி அந்த முதியவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வரும் சுஜேஷ், ஜானத்தன் இருவரும் பல்வேறு பின்னணிகளுடைய இளையர்களைத் தங்களின் அமைப்பில் இணைப்பதற்காக உயர்நிலைப் பள்ளிகள், உயர்கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுடன் கைகோத்துள்ளனர். யூஹுவா சமூக மன்றம், 'டச்' சமூக சேவை அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து ஆதரவு திரட்டவும் முயன்று வருகின்றனர்.
பள்ளிக் காலத்தில் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குத் தொண்டூழியம் செய்தாக வேண்டும் என்ற எண்ணம் மாறி, பிறர் நலனில் அக்கறை செலுத்துவதைத் தங்களின் கடமையாக இளையர்கள் கருதவேண்டும் என்பதே சுஜேஷின் வேண்டுகோள்.

