பொன்மணி உதயகுமார்
தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் 'டிசைன் ஷோ' என்ற வடிவமைப்பு கண்காட்சிக்கு இவ்வாண்டு முதல் முறையாக இரண்டு தமிழ் குறும்படங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இறுதி ஆண்டில் பயிலும் மாணவர்
களின் படைப்புகள் மார்ச் 10ல்இருந்து 15ஆம் தேதி வரை நடைபெற்ற 'டிசைன் ஷோ 2023' கண்காட்சியில் இடம்பெற்றன.
நீடித்த நிலைத்தன்மை மற்றும் சமூக மாற்றங்களைப் பிரதிபலிக்கும் வண்ணம் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் 360 இறுதி ஆண்டு மாணவர்களின் படைப்புகள் அமைந்தன. 'டுமோரோஸ் கிரியேட்டிவ்ஸ்' என்ற கருப்பொருளில் வடிவமைப்புப் பள்ளி மாணவர்களின் படைப்புகள் உருவாக்கப்பட்டன.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் ஊடகத் துறை மாணவர் ஸ்ரீராம் செந்தில்குமார், 19, தமது இறுதி ஆண்டு படைப்பாக தமிழ் குறும்படம் ஒன்றைத் தயாரித்து திரையிட்டுள்ளார்.
மின்னிலக்கத் திரைப்படம், தொலைக்காட்சி சார்ந்த பட்டயச் சான்றிதழ் பெறவிருக்கும் இவர், தலைமுறை தலைமுறையாக ஏற்படும் மனபாதிப்பைப் பிரதிபலிக்கும் விதத்தில் 'இரத்த மாலை' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். குறும்படத்தின் கதாபாத்திரங்கள் எவ்வாறு இந்த மன பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றனர் என்பது இவரது குறும்
படத்தின் கதைக் களமாக அமைந்துள்ளது.
பள்ளிப் பருவத்தில் தாம் நேரில் கண்ட இறுதிச் சடங்கு ஒன்றில் குடும்ப உறுப்பினர்கள் வெகு நாள்கள் கழித்து ஒன்று கூடியதைக் கண்ட இவர், அந்தச் சம்பவத்தைத் தழுவி திரைக்
கதை எழுதியுள்ளார்.
இக்கதையைத் தமிழில் மிகவும் இயல்பான முறையில் படம்பிடிக்க முடிந்ததாக இவர் கூறுகிறார். தலைமுறை தலை
முறையாக மனபாதிப்பு ஏற்படு வது தெற்காசிய குடும்பங்களில் அதிகமாக காணப்படுவதும் இவர் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமாகும். இந்தியப் பெற்றோர் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை இவரது குறும்படம் வலி
யுறுத்துகிறது. திரைப்பட இயக்குநராக விரும்பும் ஸ்ரீராம், தாம் தயாரித்துள்ள இந்தக் குறும்படத்திற்காக தேசிய இளையர் மன்றத்தின் 'மாற்றத்தை உருவாக்குவோர் மானியத்தை' பெற்றிருக்கிறார்.
நீடித்த நிலைத்தன்மையைத் தக்கவைத்துக்கொள்ளும்படி
கட்டுமான திட்டங்கள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் 20 வயது மித்ரா நாயுடு. பறவை இனம் வாழ்வதற்குத் தகுந்தவாறு கட்டடங்களை வடிவமைப்பது நன்று என்று நம்பும் மித்ரா, வனவிலங்குகளை அகற்றி மனித வாழ்வை மேம்படுத்துவதைக் காட்டிலும் அவற்றுடன் ஒன்றிணைந்து வாழ்வதை விரும்புகிறார்.
இவர் வடிவமைத்துள்ள 'த ஹேவன்' எனும் விடுமுறை விடுதி பறவைகளுக்கு அடைக்கலம் அளிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நிலப் பற்றாக்குறை இருக்கும் நிலையில் வனவிலங்குகளுக்குத் தனியாக இடம் ஒதுக்குவதைத் தவிர்த்து மனிதர்கள் உலவும் இடத்திலேயே விலங்குகளுக்கும் இடம் கொடுக்கும் வண்ணம் இவரது படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படைப்புக்காக இவர் வெளிநாடுகளில் நீடித்த நிலைத்தன்மையைக் காக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆராய்ச்சி செய்திருக்கிறார்.

