வெளிப்புறத் துறையில் பணித்தேக்கம் அடைவது குறித்த கவலைகள் வேண்டாம் என்றார், பயிற்றுவிப்பாளராக இணைந்து தற்போது குழு நிர்வாகியாக பணியாற்றி வரும் டிரேசி டிக்ருஸ் (படம்). பல்கலைக்கழக பட்டதாரியாக அவர் முதன்முதலில் மேற்கொண்டது, ஓபிஎஸ்ஸின் பயிற்றுவிப்பாளர் பணியே. பணியின்மீது கொண்ட ஆர்வத்தால் இத்துறையிலேயே கடந்த ஐந்தாண்டுகளாக தங்கிவிட்டார் 28 வயது டிரேசி.
இவரின் பிரதான கவலையாக இருந்தது, அலுவலக வாழ்க்கை கட்டமைப்பில் முடங்குவதே. சிங்கப்பூரின் பரபரப்பான, அவசர வேலை வாழ்க்கையை டிரேசி வெறுத்தார். 9-5 எனும் கட்டமைப்புக்குக் கட்டுப்படக் கூடாது என்று திண்ணமாக இருந்தார். அவரின் விருப்பங்களுக்கு இணங்க அமைந்தது, ஒவ்வொரு நாளும் மாறுபட்ட புது அனுபவங்களை வழங்கும் ஓபிஎஸ்.
வெளிப்புற நடவடிக்கை துறையில் டிரேசிக்கு எவ்வித அனுபவமும் ஏற்ற பின்னணியும் இருந்ததில்லை. அவர் தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றதோ ஆங்கில இலக்கியம். சிறிய உருவம் கொண்டிருந்த அவருக்கு, இது தனது பணியில் குறுக்கீடாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தது. எனினும், இவற்றை தடைகளாய் கருதவில்லை டிரேசி. மாறாக, அவை தன்னை செதுக்கும் சவால்களென கருதி அவர் இம்முயற்சியில் தொடர்ந்து உழைத்தார்.
வேறுபட்ட ஒரு களத்தில் பணிபுரியவும் அதில் சிறந்து விளங்கவும் பல்கலைக்கழகம் முடிந்த கையோடு தனக்குத் தானே சவால் விடுத்திருந்தார் டிரேசி. அறிமுகமில்லாத திறன்களைக் கற்றுக்கொண்டு அவற்றின் துணைகொண்டு வளர்வதற்கு அவர் முன்னுரிமை அளித்தார். அதில் அவர் கொண்டிருந்த விடாமுயற்சியினாலும் உழைப்பினாலும் பணிசார்ந்த சவால்களை தகர்த்து பணியில் உயர முடிந்தது அவரால்.
சிங்கப்பூர் காவல்துறை பயிற்சி படை மாணவர்களுடன் 19 நாட்கள் செலவழித்த அனுபவம் டிரேசியின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. பொதுவாக குறுகிய காலத்தையே மாணவர்களுடன் செலவிடும் நிலையில் இவ்வாய்ப்பு சிறப்புமிக்கதாக அமைந்தது. 19 நாள் நீடித்த இந்த ஓபிஎஸ் முகாம் வாயிலாக மாணவர்கள் தங்களின்மீதே நம்பிக்கை கொள்ள தொடங்கியதை நேரில் கண்டார் டிரேசி.
தங்களின் உள்ளும் தலைமைத்துவ பண்புகள் இருப்பது மாணவர்களுக்கு புலப்பட்டது. பயிற்றுவிப்பாளர்களான தங்களுடனும், சக மாணவர்களுடனும் இன்னும் நெருக்கமான பந்தங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.
பல பணிகளில் ஊழியர்கள் தாங்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை கண்கூடாக காணவோ உணரவோ முடிவதில்லை. அந்த வாய்ப்பினை ஓபிஎஸ் தனக்கு நல்கியுள்ளதை உணர்ந்தார் டிரேசி. மாணவர்களின்மீது தான் கொண்டிருந்த தாக்கத்தைக் கண்டபோது அவர் நெகிழ்ந்தார்.
"இப்பணி எளிதானதாக தோன்றலாம். ஆனால், படகு வலித்தல், ஏறுதல், வழிசெலுத்துதல் என பல்வேறு முக்கிய திறன்களை பயிற்றுவிப்பாளர்கள் வளர்த்துக்கொள்வது அவசியம். அதே சமயம், இளையர்களை பயிற்சிகளின்மூலம் மேம்படுத்துவதற்கும் பயிற்றுவிப்பாளர்கள் உதவவேண்டும்," என்றார் டிரேசி.
இப்படி பலவகையான பொறுப்புகளை ஒருங்கே கையாள எதிர்பார்க்கப்படுகின்றனர் ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்கள். முழுமை கல்வி அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்பதை அவர்கள் மறக்கலாகாது. அதற்கேற்ப, அவர்களின் அனுபவத்தை வடிவமைப்பது பயிற்றுவிப்பாளர்களின் கையிலே உள்ளது.
இதையே டிரேசி குழு நிர்வாகியாக பெரிதும் வலியுறுத்தி வருகிறார். புது, இளைய ஓபிஎஸ் பயிற்றுவிப்பாளர்களுக்கு தற்போது வழிகாட்டும் அவர், பயிற்றுவிப்பாளர்களின் வேலைப் பயணங்களுக்கு ஊட்டமும் அளிக்கிறார். எவ்வாறு தொடர்ந்து இப்பணியில் வளரலாம்; தங்களை எவ்வாறு மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளலாம் முதலியவற்றை குறித்து இளைய பயிற்றுவிப்பாளர்கள் டிரேசியிடமிருந்து கற்றுக்கொள்கின்றனர்.
ஓபிஎஸ்ஸில் பணிபுரிவோர் இவ்வகையில் ஒரு குடும்பமாகவே இயங்குகின்றனர் என்பது டிரேசியின் பார்வை. வாரத்தில் ஐந்து நாட்கள் வரை வீட்டையும் குடும்பத்தினரையும் பிரிந்து இருந்தாலும், ஒருவருக்கொருவர் தேவையான ஆதரவை அளித்துக்கொண்டு உதவிக்கொள்வதாக தெரிவித்தார் டிரேசி.
ஓபிஎஸ்ஸின் பணிச்சூழல் குறித்து விவரிக்கையில், "வெளிப்புறமே எங்களது அலுவலகம். கடலிலும் காட்டிலும், மழை, வெயிலிலும் இடையே நாங்கள் பணிபுரிகிறோம். சூரியோதயமும் அஸ்தமனமும் எங்களை தினமும் வரவேற்கும் காட்சிகள்," என்றார் அவர்.
இந்த அனுபவங்கள் டிரேசியை தனிப்பட்ட முறையில் வளர்த்தும் செதுக்கியும் உள்ளன. அவரின் பார்வைகளை மாற்றியமைத்ததுடன், குறுகியக் கால வாழ்க்கையை முழுமையாக ரசித்து வாழும் உணர்வை அவருக்கு தந்துள்ளன. பணியில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் நல்ல தலைவராக அவர் உருவெடுத்துள்ளார்.

